சுமார் 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய வடகிழக்கு தாய்லாந்தின் ஆற்றுப்படுகைகளில் பூமி அதிர நடைபயின்ற பிரம்மாண்ட உயிரினம்.அதன் ஒரு காலடித் தடமே சிறிய குளமாக மாறக்கூடிய அளவு பெரிது, அப்படிப்பட்ட ஒரு ராட்சத டைனோசரின் கதையை இப்போது விஞ்ஞானிகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். இது தென்கிழக்கு ஆசியாவிலேயே கண்டறியப்பட்ட மிகப்பெரிய டைனோசர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சையாபும் மாகாணத்தில் உள்ள குளத்தின் கரையில், புதைபடிம வேட்டைக்காரர்கள் சிலர் தற்செயலாக பிரம்மாண்டமான எலும்புகளைக் கண்டனர். அந்த எலும்புகளின் அளவு அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. உடனே லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் , தாய்லாந்தின் மகாசரகம் பல்கலைக்கழகம், சிரிந்தோர்ன் அருங்காட்சியகம் எனப் பல சர்வதேச அமைப்புகளின் விஞ்ஞானிகள் களத்தில் இறங்கினர். பத்து ஆண்டுகாலத் தீவிர ஆராய்ச்சி, அகழ்வாராய்ச்சி மற்றும் ஒப்பீட்டு ஆய்வுகளுக்குப் பிறகு, இப்போது ஒரு ‘மெகா’ செய்தியை வெளியிட்டுள்ளனர். அந்தப் பிரம்மாண்ட எலும்புகள் ஒரு புதிய வகை டைனோசருடையவை என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர். அதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர் ‘நாகாடைட்டன் சையாபுமென்சிஸ்’







