சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு செல்ல ஸ்பெஷல் பஸ்கள்

சித்ரா பவுர்ணமியையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி இன்றிரவு 9.52 மணிக்குத் தொடங்கி நாளை இரவு 11.08 மணிக்கு நிறைவடைகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 548 பேருந்துகளும், நாளை 565 பேருந்துகளும், நாளை மறுநாள் 35 பேருந்துகளும்கூடுதலாக இயக்கப்பட உள்ளன.மாதவரத்தில் இருந்து இன்று 186 பேருந்துகளும், நாளை 174 பேருந்துகளும், அடையாறில் இருந்து இன்று 55 பேருந்துகளும், நாளை 50 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு மொத்தம் 11 ஆயிரத்து 823 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.அதன்படி, விழுப்புரத்தில் இருந்து இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் காலை 10.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் பகல் 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது.

விழுப்புரத்தில் இருந்து இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 9.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா மெமு ரயில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடைகிறது. விழுப்புரத்தில் இருந்து இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 10.40 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா மெமு ரயில் திருவண்ணாமலை வழியாக நள்ளிரவு 1.50 மணிக்கு காட்பாடியை சென்றடைய உள்ளது.