இந்தோனேசியாவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியிருக்கிறது. ரிக்டர் அளிவல் 7.8 என நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.
இந்தோனேசியாவின் டெர்னேட் அருகே வடக்கு மொலுக்கா கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு அண்டை நாடுகளில் சுனாமி எச்சரிக்கைகளைத் தூண்டியுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்ற கவலைகளை எழுப்பியுள்ளது. நிலநடுக்க மையத்திலிருந்து 1,000 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளுக்கு ஆபத்துகள் இருப்பதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு குறிப்பிடுகிறது. இது இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவின் கடற்கரைகளைப் பாதிக்கும்.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி, பிலிப்பைன்ஸ் கடற்கரையிலிருந்து சுமார் 580 கி.மீ. தெற்கிலும், மலேசியாவின் சபா பகுதியிலிருந்து 1,000 கி.மீ. தொலைவிலும் அமைந்திருந்தது. சமீபத்திய தரவுகளின் அடிப்படையில், பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அந்நாட்டின் நிலநடுக்கவியல் முகமையான ‘Phivolcs’ தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் மலேசியாவிற்குச் சுனாமி அச்சுறுத்தல் ஏதுமில்லை என்றும், நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்தியா பாதிக்கப்படாது என்றே தெரிகிறது.







