ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் இப்போது டிஜிட்டல் உலகையே அதிரவைக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. பஹ்ரைனில் உள்ள அமேசான் நிறுவனத்தின் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் அமேசான் வெப் சர்வீஸ் பிரிவின் கீழ் இயங்கும் ‘படெல்கோ’ நிறுவனத்தின் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. முன்னதாக, ஏப்ரல் 1-ம் தேதி முதல் கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்காவின் 18 முன்னணி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் ராணுவம் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்காவிற்கு உளவு பார்க்கவும், ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் தாக்குதல்களைத் திட்டமிடவும் உதவி செய்வதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக, “எங்கள் நாட்டின் மீது நடத்தப்படும் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பதிலடியாக இந்த நிறுவனங்களின் அலுவலகங்கள் தரைமட்டமாக்கப்படும்” என ஈரான் ராணுவம் எச்சரித்திருந்தது.
இப்போது அமேசான் அலுவலகம் மீது நடத்தப்பட்டுள்ள இந்தத் தாக்குதல், போர் இனி போர்க்களத்தோடு நிற்காமல் ஐடி மற்றும் டிஜிட்டல் உலகிற்கும் பரவிவிட்டதைக் காட்டுகிறது. இதனால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.







