நாளை ராகுல்காந்தி பிரச்சாரம்!

கேரள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (மார்ச் 23) நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி நாளை தனது அதிகாரப்பூர்வ தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

நாளை கோழிக்கோடு வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். அவருடன் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கியத் தொகுதிகளில் பிரம்மாண்ட ரோடு ஷோவில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். நாளை மாலை கோழிக்கோடு கடற்கரை பகுதியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். இதில் தேசிய மற்றும் மாநில அளவிலான முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களைப் போலவே, கேரளாவிலும் 5 முக்கிய நலத்திட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளது. அவற்றை ராகுல் காந்தி இந்தப் பிரசாரத்தின் போது விரிவாக விளக்கவுள்ளார்:

கேரள அரசுப் பேருந்துகளில் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயணம்.

கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1,000 நிதி உதவி.

சமூக நல ஓய்வூதியத் தொகை ₹3,000 ஆக உயர்வு.

ஒரு குடும்பத்திற்கு ₹25 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு.

இளம் தொழில்முனைவோருக்கு ₹5 லட்சம் வரை வட்டியற்ற கடன் வசதி ஆகிய காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகள் கேரளாவில் கவனம் பெற்றுள்ளது.