பூங்காக்களில் ரேடியோ

நாட்டில் உள்ள அனைத்து பொது பூங்காக்களிலும் ரேடியோக்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா நகரம், வித்யாநகரில் உள்ள அகில இந்திய வானொலி பத்ராவதி மையத்தின் டிரான்ஸ்மீட்டர் திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை, ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எல். முருகன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது.பிரசார் பாரதியின் உள்கட்டமைப்பு மேம்பாடு, திட்ட தரத்தை மேம்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றுக்காக ஒன்றிய அரசு கடந்தாண்டு ரூ.2,500 கோடி செலவிட்டது. இதன் ஒரு பகுதியாக, பத்ராவதி ஆகாஷ்வானி நிலையத்தில் உள்ள எப்எம் நிலையத்தின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடியின் கனவின்படி, அகில இந்திய வானொலி செயல்பாடுகள் அகில இந்திய எப்எம் நிலையங்களாக மாற்றப்பட்டுகின்றன. மேலும், நாட்டில் உள்ள அனைத்து பொது பூங்காக்களிலும் ரேடியோக்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ஷிவமொக்கா மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களிலும் சோதனை அடிப்படையில் ரேடியோக்கள் நிறுவப்படும்’ என்றார்.