விபத்துக்குள்ளான விமானத்தின் பிளாக் பாக்ஸ் மற்றும் குரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், திகிலூட்டும் உரையாடல்கள் கிடைத்துள்ளன. என்ஜின் திடீரென நின்றபோது, ஒரு விமானி அதிர்ச்சியுடன், ஏன் என்ஜினை அணைத்தாய்?என்று சக விமானியிடம் கேட்டது பதிவாகியுள்ளது. அதற்கு மற்றொரு விமானி திகைப்புடன் மறுப்பு தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் இடதுபுற என்ஜின் முதலில் அணைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. வழக்கமாக இடதுபுற இருக்கையில் கேப்டன் அமர்ந்திருப்பார் என்பதால், சந்தேகப் பார்வை கேப்டன் சுமித் சாவர்வாலை நோக்கித் திரும்பியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 12-ம் தேதி நடந்த இந்தத் துயரம் இன்னும் ஆறாத வடுவாக உள்ளது. போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம், ஓடுபாதையிலிருந்து புறப்பட்ட சில நொடிகளிலேயே நிலைதடுமாறி அருகிலிருந்த மருத்துவக் கல்லூரி கட்டிடம் மீது மோதி நொறுங்கியது. இதில் 241 பயணிகளும், கட்டிடத்தில் இருந்த 19 பேரும் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 53 பேர் பிரிட்டிஷ் குடிமக்கள். இந்த அகோர விபத்தில் விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்பவர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
விசாரணை அமைப்புகளின் தகவல்படி, விமானத்தின் கட்டுப்பாட்டை மீட்பதற்கு துணை விமானி கிளைவ் குண்டர் கடுமையாகப் போராடியதும், அப்போது கேப்டன் சுமித் சாவர்வால் மௌனமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. இறுதி அறிக்கையில் கேப்டனே முழுப் பொறுப்பாகக் காட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒரு தனி நபர் மீது பழியைப் போட்டுவிட்டு, விமானப் போக்குவரத்துத் துறையின் நற்பெயரைக் காப்பாற்ற முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு குறித்த சர்வதேச கேள்விகளை எழுப்பியுள்ளது. விமானிகளின் மனநிலை மற்றும் உடல் தகுதி குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசிக்கவுள்ளது. இந்திய விமான விபத்து விசாரணைப் பிரிவு (AAIB), அமெரிக்க ஏஜென்சிகள் மற்றும் போயிங் நிறுவனம் இணைந்து இந்தப் பயங்கரமான உண்மையை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.
விமானி வேண்டுமென்றே என்ஜினை அணைத்தது உறுதியானால், அது உலக விமானப் போக்குவரத்து வரலாற்றிலேயே மிக மோசமான குற்றமாகப் பார்க்கப்படும்.








