வானில் ஒரு அதிசயம் நடக்கப் போகிறது. பொதுவாக சூரியன் அஸ்தமித்த பிறகு நிலவு மட்டுமே வானில் வரும். ஆனால், இப்போது புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என்று ஆறு கோள்களும் ஒரே நேரத்தில் வானில் தோன்றவுள்ளது. இந்தக் கோள்களின் அணிவகுப்பை எப்போது பார்க்கலாம்.
இந்தப் பிரபஞ்சம் பல அற்புதங்களைக் கொண்டது. வானில் நமக்கு நட்சத்திரமாகத் தெரியும் ஒவ்வொரு கோளுக்கும் ஒரு பெரிய கதையே இருக்கிறது. இந்த வானில் தொடர்ச்சியாகப் பல அதிசயங்களும் கூட நடந்து கொண்டு தான் இருக்கும். அப்படியொரு அரிய நிகழ்வு இப்போது நடக்கிறது. அதாவது ஆறு கோள்கள் ஒரே நேரத்தில் இணைந்து, ஒரு அரிதான மற்றும் அழகான வானியல் நிகழ்வு இப்போது நடக்கிறது.
பல கோள்கள் வானத்தின் ஒரே பகுதியில் அணிவகுத்து நிற்பது போலக் காட்சியளிப்பதால், இதை “கோள்களின் அணிவகுப்பு” அதாவது planet parade என்று அழைக்கிறார்கள். சூரியன் மறைந்த சிறிது நேரத்திற்குப் பிறகு வானம் தெளிவாக இருந்தால், இந்த பல கோள்களை ஒரே நேரத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இப்போது தொடங்கி பிப்ரவரி மாத இறுதி வரை இந்த நிகழ்வு வானில் தென்படும். இந்தக் காலகட்டத்தில் புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்களும் வானத்தின் ஒரே பகுதியில் தெரியும். இவற்றுள் சிலவற்றை வெறும் கண்ணால் பார்க்க முடியும்.. எனினும், மற்ற கோள்களைத் தெளிவாகக் காண பைனாகுலர் அல்லது தொலைநோக்கி தேவைப்படும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்..
சூரியன் மறைந்த சிறிது நேரத்திலேயே கோள்கள் தெரிய ஆரம்பித்துவிடும். அதில் புதன் மற்றும் வெள்ளி ஆகியவை குறுகிய காலத்திற்கே மட்டுமே தெரியும். அதேநேரம் வியாழன் கோள் இரவு நேரத்தின் பிற்பகுதி வரை வானில் பிரகாசமாகத் தெரியும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.. இந்த அரிய நிகழ்வில், வானத்தைப் பார்ப்பவர்களுக்குப் புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என மொத்தம் ஆறு கோள்களையும் காணும் வாய்ப்பு கிடைக்கும்.
வெள்ளிக் கோள் மிகப் பிரகாசமாக ஒளிர்வதால், அதனை எளிதாகக் கண்டறியலாம். இது வானில் மேற்குப் பக்கம் அடிவானத்திற்குக் கீழே தாழ்வாகத் தென்படும். புதன் கோள் வெள்ளிக்கு நேர் மேலே, மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே தென்படும். சனிக் கோள் தென்மேற்குத் திசையில் சற்று உயரத்தில் தெரியும். சூரியக் குடும்பத்தின் மிகப் பெரிய கோளான வியாழன், கிழக்குப் பகுதியில் உயரமாக ஒளிரும். இரவு நேரம் செல்லச் செல்ல அது மேலும் தெளிவாகத் தெரியும்.
யுரேனஸ் கோள் வியாழன் மற்றும் சனிக்கு இடையில், பிலேயட்ஸ் நட்சத்திரக் கூட்டத்திற்குக் கீழே காணப்படும். இந்த இரு கோள்களைக் காண பைனாகுலர்கள் அவசியமாகும். நெப்டியூன் கோள் சனிக்கு மிக அருகில் இருக்கும். அதைத் தெளிவாகப் பார்ப்பதற்குத் தொலைநோக்கி தேவைப்படும்.
அதேநேரம் நமது நாட்டில் பெரும்பாலான நகரங்களில் ஒளி மாசு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இதனால் வானில் இந்தக் கிரகங்களைப் பார்ப்பதில் சிக்கல் இருக்கலாம். அதேபோல இரவு நேரம் எதிர்பாராத வகையில் தோன்றும் மேகங்களும் சிக்கலை உருவாக்கலாம். அதேநேரம் வானம் தெளிவாக இருந்தால் துல்லியமாகப் நாம் பார்க்கலாம்..








