தமிழகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( பிப்ரவரி 8) டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ முதன்மை தேர்வுகள் நடைபெற இருந்தன.இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள், தேர்வு மையங்கள் உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வர்களின் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில், டி. என். பி. எஸ். சி. தேர்வுகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு ஹால் டிக்கெட் உடன் குறிப்பிட்ட நேரத்தில் வருகை தந்திருந்தனர். ஆனால், திடீரென டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், மற்றொரு நாளில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த தேர்வர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது, அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
டி. என். பி. எஸ். சி. தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. மேலும், இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சண்முகசுந்தரம் அந்தப் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, புதிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கட பிரியா ஐ. ஏ. எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, டிஎன்பிஎஸ்சி சார்பில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாகவும், சில தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் தாமதமாக சென்றது மற்றும் தொழில்நுட்பக் கோளாறு, டி. என். பி. எஸ். சி. நிர்வாகத்தில் குளறுபடி ஆகியவற்றால் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. மேலும், ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தேர்வுக்கான புதிய தேதி மற்றும் புதிய தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்புகள் 15 நாட்களுக்கு முன்பாக தேர்வர்களுக்கு எஸ். எம். எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்தது. மேலும், வருகிற பிப்ரவரி 22- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற இருந்த இதர தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும், இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் பிப்ரவரி 13- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







