மத்திய அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி..!

டெல்லி: 25 ஆண்டுகள் பணி முடித்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (யு.பி.எஸ்.), முழுமையான உறுதியளிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படுகிறது.

அதேநேரம் 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் பெற தகுதி உடையவர்கள் தான் மத்திய அரசு தனது புதிய விதிமுறையில் அறிவித்துள்ளது. இதன் மூலம் 25 ஆண்டுகள் பணியாற்றாமல் 20 ஆண்டு அல்லது அதற்கு மேல் பணியாற்றவர்களும் இனி நல்ல ஓய்வூதியம் பெறுவார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்காக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (Unified Pension Scheme – UPS) மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த ஒரு புதிய ஓய்வூதியத் திட்டம் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை போலவே உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று விரும்பிய மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வந்தது.

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அதேநேரம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் முக்கியமான விதிமுறையாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன்படி இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற, ஊழியர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். விருப்ப ஓய்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியாற்றி இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதேபோல், 25 ஆண்டுகள் பணி முடித்த மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின்கீழ் (முழுமையான உறுதியளிக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது

இதனிடையே, தேசிய ஓய்வூதிய முறையின்கீழ் (என்.பி.எஸ்.), ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் தொடர்பான விஷயங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அண்மையில் ‘மத்திய சிவில் சர்வீசஸ் (தேசிய ஓய்வூதிய முறையின்கீழ் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல்) விதிகளை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த விதிகளை, கடந்த 2-ந்தேதி, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை அரசிதழில் வெளியிட்டிருந்தது.

அதில் உள்ள புதிய விதியின்படி, 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்கள், விகிதாச்சார அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட ஊதியம் பெற தகுதி உடையவர்கள் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய விதிகளின் படி, 20 ஆண்டுகள் பணிக்கு பிறகு விருப்ப ஓய்வுபெற ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பணியாற்றிய ஆண்டுகளை விகிதாச்சார அடிப்படையில் கணக்கிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் சந்தாதாரருக்கு வழங்கப்படும். அவர் ஓய்வு பெறும் நாளில் இருந்து இத்தொகை வழங்கப்பட உள்ளது.

அதேபோல் சில சலுகைகளும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, தனிப்பட்ட தொகுப்பில் 60 சதவீதத்தை இறுதியாக திரும்பப்பெறுதல், ஒவ்வொரு 6 மாத பணிக்கும் அகவிலைப்படி, ஓய்வு பணிக்கொடை, விடுப்பை பணமாக்குதல், மத்திய அரசு ஊழியர்கள் குழு காப்பீட்டு திட்டம் போன்ற இதர சலுகைகளையும் ஓய்வு பெறும்போது பெறலாம் என அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டு, உறுதியளிக்கப்பட்ட ஊதியம் பெறுவதற்கு முன்பே சந்தாதாரர் இறந்து விட்டால், சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்ட அவரது கணவர்/மனைவிக்கு குடும்ப ஊதியம் வழங்கப்படும் என்றும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அரசிதழில் தெரிவித்துள்ளது..