திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்ல அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம்.
இந்த இலவச பயணத்துக்காக 2024- 2025 கல்வியாண்டில் 23,49,616 பள்ளி மாணவர்களுக்கும், சுமார் 2 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பயணத்துக்கான பாஸ் வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் பொதுப் பேருந்துகளில் புத்தகப்பை, உணவுப்பைகளுடன் செல்லும் போது பேருந்தில் கூட்ட நெருக்கடியில் சிக்கி சிரமப்படுகின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர். இவ்வாறு பயணம் செய்யும் போது சில நேரங்களில் விபத்துகளில் சிக்கி மாணவ, மாணவிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.
எனவே அரசு பேருந்துகளில் இலவச பாஸை பயன்படுத்தி பயணிக்கும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் பள்ளி, கல்லூரி நேரங்களில் மாணவ, மாணவிகளுக்காக மட்டும் தனி பேருந்து இயக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு இன்று விசாரித்தது. பிள்ளைகளை சிறப்பாக வளர்ப்பதில் பெற்றோர்களுக்கு அதிக கடமை உள்ளது. தற்போது பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் புகைப்பழக்கம், மது, கஞ்சா உள்ளிட்ட பழக்கங்களுக்கு ஆளாகி வருவது அதிகமாக உள்ளது. மாணவிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும் அளவில் நிலைமை உள்ளது.
பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்பாக ஏராளமான புகார்கள் வருகின்றன. ஓட்டுநர், நடத்துநர் அறிவுறுத்தினாலும் மாணவர்கள் அதனை ஏற்காமல் சாகசம் என நினைத்து படிக்கட்டில் பயணம் செய்து விபத்தில் சிக்குகின்றனர். படிக்கட்டுகளில் பயணம் செய்வது மோட்டார் வாகன விதியின் படி தண்டனைக்குரிய குற்றம். படிக்கட்டில் பயணிப்பவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு கூட செய்யலாம்.
எனவே, பயணத்தின் போது மாணவர்கள் பேருந்திற்குள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதையும் மீறி சாகசத்திற்காக படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.