வெற்றிகரமாக விண்வெளி பயணம் மேற்கொண்டுள்ள சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் இன்று மாலை சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ‘ஆக்ஸியம் – 4’ திட்டத்தின் கீழ் இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கிறார். அவருடன் இதில் முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன், ஹங்கேரி வீரர் திபோர் கபு, போலன்ந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கீ ஆகியோர் என நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் இந்திய நேரப்படி நண்பகல் 12.02 மணிக்கு விண்ணில் பாய்ந்தனர்.சில நிமிடங்களுக்கு பிறகு ராக்கெட்டில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி தொடர்ந்து பயணித்து வருகிறது. பயணத்தை தொடங்கிய போது இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா ‘ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்’ என்று முழக்கமிட்டார். அத்துடன் ஏ.ஆர் ரஹ்மானின் பாடலை கேட்டபடி அவர் பயணத்தை தொடங்கினார். விண்கலத்தில் இருந்தபடி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பேசிய சுபாஷ் சுக்லா, “இது தனது பயணத்தின் தொடக்கம் மட்டுமல்ல.. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் தொடக்கம்” என்றார்.28 மணி நேரம் சுற்றுப்பாதையில் பயணிக்க உள்ள ஆக்ஸியம் 4 திட்டக்குழு இன்று மாலை 4:30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குழுவில் உள்ள நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வார்கள். நால்வரும் சுமார் 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ள நிலையில், இந்தியா சார்பில் சுபான்ஷு சுக்லா 7 ஆய்வுகளை மேற்கொள்கிறார்.மேலும், விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பள்ளி குழந்தைகளுடன் சுக்லா கலந்துரையாடுவார் என்று கூறப்படுகிறது. 1984 ஆம் ஆண்டு இந்திய வீரர் ராகேஷ் சர்மா விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டார். அதன் பிறகு 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் இரண்டாவது இந்திய வீரர் என்கிற பெருமையை சுபான்ஷு சுக்லா பெறுகிறார். அத்துடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்திய வீரர் என்கிற சாதனையையும் இவர் நிகழ்த்த இருக்கிறார்.
வரலாறு படைக்கும் சுபான்ஷு சுக்லா.. இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடையும் ‘ஆக்ஸியம் – 4’ குழு..
