அரக்கோணம்: திமுகவினர் பொதுக்கூட்டம் நடத்தி தன்னை குற்றவாளிபோல் சித்தரிப்பதாக குற்றம்சாட்டி, திமுக முன்னாள் பிரமுகர் மீது புகார் அளித்த கல்லூரி மாணவி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பருத்திப் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி(21), கல்லூரி மாணவி. இவர் சமீபத்தில் தனது கணவரும் மற்றும் முன்னாள் திமுக அரக்கோணம் மத்திய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளருமான தெய்வச்செயல்(40) என்பவர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தொடர்பாக அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து காவல் துறையினர் முறையாக விசாரணை செய்யவில்லை என மாணவி தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. மாணவியின் புகாரைத் தொடர்ந்து தெய்வச்செயல் பதவி பறிக்கப்பட்டது. இதற்கிடையே, மாணவிக்கு ஆதரவாகவும், திமுக அரசைக் கண்டித்தும் அரக்கோணத்தில் கடந்த 21-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, மாணவிக்கு எதிராக கடந்த சில நாட்களுக்கு முன்பு அரக்கோணத்தில் திமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத்காந்தி பங்கேற்றுப் பேசும்போது, பணம் பறிக்கும் நோக்கில் மாணவி செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், மாவட்ட காவல் துறையினர், ‘மாணவியின் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். அவரின் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவைக்கு ஆதாரம் இல்லை’ என தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, அந்த மாணவி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘முதலில் காவல்துறையினர் என்னை அசிங்கப்படுத்தி வந்தனர். தற்போது திமுகவினர் மேடை போட்டு அசிங்கப்படுத்தி வருகின்றனர். நான் புகார் அளித்தவர்கள் மீது போலீஸார் இதுவரை விசாரணை மேற்கொள்ளவில்லை.
ஆனால், என்னை தொடர்ந்து விசாரிக்கிறார்கள். விசாரணை என்ற பெயரில் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர். துணிச்சலுடன் வெளியில் வந்த என்னை குற்றவாளிபோல் சித்தரித்து கேவலப்படுத்துகின்றனர், ஆளுநரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அனைத்து விவரங்களையும் தெரிவிப்பேன்’ என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.