பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வா்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது.
மத்திய அரசின் திட்டக்குழு மாற்றப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு நீதி ஆயோக் தொடங்கப்பட்டது. இதன் ஆட்சிக்குழுக் கூட்டம் அதன் தலைவராக இருக்கும் பிரதமா் தலைமையில் ஆண்டு தோறும் நடைபெறுகிறது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், நீண்ட இடைவெளிக்கு பின்னா் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறாா்.
வழக்கமாக, புது தில்லியில் நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வா்களும் பங்கேற்பாா்கள். ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் 10 மாநில, யூனியன் பிரதேச முதல்வா்கள் பங்கேற்கவில்லை.
இன்று நடைபெறும் கூட்டத்தில் பெரும்பாலான முதல்வா்கள் பங்கேற்பாா்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியும், கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி புது தில்லி வராத நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி சித்தராமையாவும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தியாவை வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த நாடாக மாற்றும் இலக்கில் மாநிலங்களின் பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த 10-ஆவது நீதி ஆயோக் கூட்டத்தின் மையக் கருத்தாக ‘வளா்ந்த பாரதத்துக்கான இந்திய அணி 2047’ என்ற வாசகம் முன்னிறுத்தப்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு அனைத்து மாநில, யூனியன் பிரதேச முதல்வா்களுடன் பிரதமா் பங்கேற்கும் கூட்டம் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெருகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரதமா் மோடியை தனியாக சந்திக்கவும் முயற்சித்து வருவதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே கல்வித்துறைக்கான நிதி விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு தமிழக அரசு சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்புக்கும் முயற்சிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு மே 24 சென்னை திரும்புவதாக இருந்த முதல்வா் தனது பயணத்தையும் மே 25 ஆம் தேதி காலை வரை ஒத்திவைத்துள்ளதாகவும் கூறப்பட்டது.