கோவையில் பதுக்கி வைத்து குட்கா, கஞ்சா, மது பாட்டில் விற்பனை வாலிபர்கள் உட்பட 3 பேர் கைது.

கோவை, மே 29- கோவையில் பதுக்கி வைத்து குட்கா, கஞ்சா, மது பாட்டில் விற்பனை செய்த வாலிபர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை ராமநாதபுரம் போலீசாருக்கு புளியகுளம் பகுதியில் உள்ள மளிகை கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள மோகன் (43) என்பவரது மளிகை கடைக்கு சென்று சோதனை செய்தனர். அதில் அங்கு குட்கா பதுக்கி வைத்து விற்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடைக்காரர் மோகனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரது கடையில் இருந்து 960 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர். கோவை சாய்பாபா காலனி போலீசார் அன்னை சத்தியா நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கிருந்த காலி மைதானத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சோதனை செய்தனர். அதில் அவரிடம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் கோயில்மேட்டை சேர்ந்த முத்துராஜ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் ஆர்எஸ் புரத்தை அடுத்த பூமார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே சோதனை செய்தனர். அப்போது அங்கு மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த நவநீதன் (24) என்பவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 84 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்