ஆஸ்திரேலிய கடற்கரையில் 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதல்: 4 பேர் பலி – மூவர் படுகாயம்..!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கடற்கரையில் 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர்.

ஆஸ்திரேலியாவின் கோல்ட் கடற்கரை பிராந்தியத்தின் வடக்கு பகுதியில் தீம் பார்க் அமைந்துள்ளது. இது பிரபலமான சுற்றுலாதளமாகும். இங்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து படகு சவாரி செல்வார்கள். இந்நிலையில் நேற்று பிற்பகல் கடற்கரை பகுதியில் ஒரு ஹெலிகாப்டர் புறப்பட தயாரானபோது மற்றொரு ஹெலிகாப்டர் தரையிறங்கியது. இதனால் இரண்டு ஹெலிகாப்டர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் ஒரு ஹெலிகாப்டர் சேதமடைந்த நிலையில் மற்றொன்று பாதுகாப்பாக தரையிறங்கியது.

இந்த விபத்தில் சேதமடைந்த ஹெலிகாப்டரில் இருந்த 4 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மற்றொரு ஹெலிகாப்டரில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்ததில் உள்ளே இருந்த பயணிகள் லேசாக காயம் அடைந்தனர். அவர்களுக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.