ஓபிஎஸ் மகன்கள் உள்பட 18 பேர் கூண்டோடு அதிமுகவில் இருந்து நீக்கம்-இபிஎஸ் அதிரடி உத்தரவு..!

சென்னை: ஓ.பன்னிர்செல்வம் ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், எம்.பி, மருது அழகுராஜ் உள்ளிட்ட 18 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஓபன்னீர்செல்வத்தின் மகன்களான ரவீந்தரநாத், ஜெயபிரதீப் ஆகியோர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர்களது மகன்களையும் கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்களும் அவப்பெரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஓபிஎஸ் மகன்களுடன், முன்னாள் அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன், செய்தித்தொடர்பாளர்கள் மருது அழகுராஜ், கோவை செல்வராஜ், வர்த்தக அணிச் செயலாளர் வெங்கட்ராமன், தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் கோபால கிருஷ்ணன், தேனி மாவட்டச் செயலாளர் சையது கான் உள்ளிட்ட 18 பேர் கூண்டோடு நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேனி எம். பியும், ஓபிஎஸ் மகனுமாகிய ரவீந்திரநாத் நீக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்ற மக்களவையில் அதிமுக பிரதிநிதித்துவத்தை இழக்கிறது.