தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் புதிதாக களம் காண்கிறது. அதற்கான தேர்தல் பணிகளை தீவிரமாக அக்கட்சி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி வேலூரில் தவெக மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது.
சேலத்தைத் தொடர்ந்து வேலூர் அகரம் சேரியில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்துக்காக தவெக மாவட்டச் செயலாளர் வேல்முருகன், காவல்துறையிடம் அனுமதி கோரி இருந்தார். இந்த நிலையில் 20 நிபந்தனைகளுடன் கூட்டத்தை நடத்த காவல்துறை அனுமதி வழங்கி இருக்கிறது. நிபந்தனைகள் வழங்கப்பட்டதை அடுத்து, கூட்டத்துக்கான இடம் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதற்கான பணியில் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கூட்டத்தை நடத்த அகரம்சேரியில் 33 ஏக்கா் பரப்பளவு நிலத்தை, தவெக நிர்வாகிகள் தயார் செய்து வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தவெக தலைவர் விஜய் சாலை மார்க்கமாக வேலூர் வர திட்டமிட்டு உள்ளார். அப்படி அவர் வருகையில் தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் அவரை பின்தொடர வேண்டாம் என்று தவெக சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள் வரவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. சேலத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்துக்கு வந்த ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, தொண்டர்களின் பாதுகாப்பில் விஜய் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார். மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவமும், பாதுகாப்பு நலனுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம். அதற்காக இதுவரை நடந்த தவெக கூட்டத்திலேயே முதன்முறையாக வேலூரில் நடைபெறும் தவெக சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பந்தல் போடப்படுகிறது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. மேலும் அங்கு 5,000 நாற்காலிகள் போடப்பட்டு, அதனுடன் தண்ணீர் பாட்டிலும் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. அதற்காக வேலூரில் கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, அனைத்து மத கடவுள்களின் புகைப்படங்களையும் வைத்து பிரம்ம முகூர்த்த நேரத்தில் சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது.
விஜய் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டம் ஒன்றில் கூட, பந்தல் அமைக்கப்படவில்லை. முதன்முறையாக அதில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார் விஜய். வெயிலின் தாக்கத்தால் கூட்டத்துக்கு வரும் தொண்டர்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர். மேலும், சேலத்தில் வெயிலின் தாக்கத்தாலேயே சுராஜ் என்ற வடமாநில இளைஞர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு, தமிழக வெற்றிக் கழகமும் அக்கட்சியின் தலைவர் விஜய்யும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விஜய் கூட்டத்துக்குச் சென்றால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்ற பொதுவாக கருத்துக்கு மத்தியில், இனி தவெக கூட்டத்தில் ஒரு உயிர் கூட போகக் கூடாது என்ற மனநிலையில், கட்சியும் விஜய்யும் உள்ளனர்..







