மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000.?

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, பெண்களின் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தில் அதிரடியான மாற்றங்களைச் செய்ய திமுக அரசு தயாராகி வருகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு இந்த திட்டம் ஒரு முக்கிய துருப்புச் சீட்டாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தற்போது மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்தத் தொகையை 1,500 அல்லது 2,000 ரூபாயாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, வேலூர் காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மூத்த அமைச்சர் துரைமுருகன், “மகளிர் உரிமைத் தொகை உயர்கிறது, இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என கூறியுள்ளார். முன்னதாக அமைச்சர் ஐ.பெரியசாமியும், பொங்கல் பண்டிகையை ஒட்டி பெண்களுக்கு ஒரு பெரிய பரிசு காத்திருப்பதாக கோடிட்டுக் காட்டியிருந்தார்.

கடந்த டிசம்பர் மாதம் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிதாக சுமார் 17 லட்சம் பெண்கள் இதில் இணைக்கப்பட்டனர். தற்போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்குவோம் என வாக்குறுதி அளித்து வருகிறது. இதற்குப் போட்டியாகவும், பெண்களின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் உரிமைத் தொகையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு திமுக தள்ளப்பட்டுள்ளது.

ஆளும் தரப்பைச் சேர்ந்த இரண்டு முக்கிய அமைச்சர்களே இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதால், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.