தமிழக அரசு லோகோவை பயன்படுத்தியது ஏன்..? – நடிகர் அஜித்குமார் பதில்..!!

டிகர் அஜித் குமார், கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல் என பன்முக திறமையாளர். அஜித் குமார் உருவாக்கியுள்ள கார் ரேசிங் அணி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகை சூடி வருகிறது.

அண்மையில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்தின் ‘அஜித் குமார் ரேசிங் அணி’ பங்கேற்றது. இதில், அஜித்குமார் ரேஸிங் அணி ஒட்டுமொத்தமாக 3-வது இடம் பிடித்தது.

இந்நிலையில், அஜித் குமாருக்கும் அவரது ரேஸிங் அணிக்கும் தனது எக்ஸ் பக்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதில், சர்வதேச அளவில் கார் பந்தயத்தில் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் நடிகரும், நண்பருமான அஜித்குமார் பெருமையடையச் செய்துள்ளதாகப் பாராட்டிப் பதிவிட்டிருந்தார்.

சர்வதேச போட்டியின்போது நம்முடைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை ரேஸிங் உபகரணங்கள் மற்றும் ஜெர்சியில் பயன்படுத்தியதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்வதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இதற்கு நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்துள்ளார். ‘தங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் தங்களுக்குத் துணை நின்று வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உயரிய இலக்குகளை நோக்கி அஜித்குமார் ரேஸிங் அணி முழு முயற்சியுடன் பயணிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘சென்னையில் கடந்த ஆண்டு ‘ஸ்ட்ரீட் ரேஸ்’ கார் பந்தயத்தை தமிழ்நாடு அரசு நடத்தியது. என்னைப் போன்ற மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகர்களுக்கு பெரிய உந்துதலாக இருந்தது. அதுமட்டுமின்றி வேறு பல விளையாட்டுகளுகும் தமிழ்நாடு அரசு உதவி வருகிறது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இலச்சினையை நாங்கள் உடையில் அணிகிறோம்’ என்று நடிகர் அஜித் குமார் கூறியுள்ளார்.