புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் வாராணசியில் மந்திரங்கள் மூலமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல்முறையாக மே 25-ல் தொடங்கிய இந்த முகாமுக்கு முதல் நாளில் 42 நோயாளிகள் வந்திருந்தனர்.
மந்திரங்களின் சக்தியை மக்களிடம் பரப்புவதற்காக காசி எனும் வாராணசியில் முதன்முறையாக மந்திர சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. 21 நாள் மந்திர சிகிச்சை முகாமில், நோயாளிகளுக்கு 3,000 மந்திரங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
அன்றாடம் தினசரி 3 மணி நேரம் 14 நிமிடங்களுக்கு இந்த சிகிச்சை நடைபெறுகிறது. முகாமில் உள்ள மந்திர நிபுணர்கள் நோயாளிகளின் நோய்க்கு ஏற்ப மந்திரங்களை ஓதி சிகிச்சை அளிக்கின்றனர்.
காலை 1.30 மணி நேரமும் மதியம் 1.30 மணி நேரமும் தியானம், யோகா மற்றும் பிராணாய நாமத்துடன் மந்திர சிகிச்சை தொடங்கப்பட்டது. இந்த முகாமில் சிகிச்சை பெற முதல் நாளில் 42 நோயாளிகள் வந்தனர்.
இந்த முகாமை, வாராணசியின் ஷுத்திபூரிலுள்ள ரிஷிவ வேத ஆராய்ச்சி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ மையத்தில் துவக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் ஜைன மந்திரங்களும் ஓதி சிகிச்சைகள் குணப்படுத்தப்பட உள்ளன.
இதற்காக, பிஹாரின் புத்த மடாலயம் அமைந்த ராஜ்கீரின் ஜைன மந்திர நிபுணர் அம்ரிதேஷ் குமார் பாஸ்கர் வருகை புரிந்துள்ளார். இவர், நோய்களின் அதிவேகத்தன்மையைக் கட்டுப்படுத்த ஜைன மந்திரங்கள் மற்றும் ஆயுர்வேத மந்திரங்களையும் ஓதினார்.
இங்கு மந்திர சிகிச்சை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மூன்று குழந்தைகளுக்கும் அளிக்கப்பட்டன. இவர்களுக்காக, நெருப்பு மற்றும் வீனஸ் மந்திரங்கள் ஓதப்பட்டன.
இது குறித்து மந்திர நிபுணர்கள் கூறுகையில், ‘இந்த மந்திரங்கள் மூலம், எதிர்மறை சிந்தனை மற்றும் கடந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் சிந்தனையை சரியான திசையில் கொண்டு வர முடியும். யோகா, தியானம் மற்றும் பிராணயாமத்துடன், மந்திர சிகிச்சை தினமும் செய்யப்படும்.
வெவ்வேறு நோய்களுக்கு மூவாயிரம் மந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நோயாளிகளுக்கு அவர்களின் நோய்க்கு ஏற்ப மந்திர சிகிச்சை அளிக்கப்படும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த மந்திரங்கள் அனைத்தும் பிராகிருத மொழியில் இருப்பவை.’ எனத் தெரிவித்தார்.
நோயாளிகளின் நோய்க்கு ஏற்ப மந்திர நிபுணர்கள் சிகிச்சைக்கான மந்திரங்களை ஓதுகிறார்கள். இவற்றை நோயாளி 30 நிமிடங்கள் தியான நிலையில் மந்திரங்களைக் கேட்க வேண்டும் என அறிவுறத்தப்படுகிறது. இதற்குப் பிறகு, ஒவ்வொரு நோயாளியிடமும் ஐந்து நிமிடங்கள் மந்திரங்களைச் சொல்லக் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் தியானிக்கச் சொல்லப்படுகிறார்கள்.