துரோகிகளின் கையிலிருக்கும் அதிமுகவை மீட்டெடுக்காமல் விட மாட்டோம் – டி.டி.வி.தினகரன் சூளுரை.!!

திண்டுக்கல்: அதிமுகவை மீட்டெடுக்காமல் விட மாட்டோம் என அமமுக மாநில பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் கிழக்கு, மேற்கு மாவட்ட அமமுக பூத் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்டச் செயலாளர் நல்லசாமி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டச் செயலாளர் செல்வ பாண்டி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது: மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக மட்டும் தான் இருந்தது. ஆனால், அமமுக-வுக்கு எதிராக பல எதிரிகளும், துரோகிகளும் இருக்கின்றனர். நமக்கு நண்பர்களாக இருந்தவர்கள், பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு பழனிசாமியுடன் கைகோத்து இருக்கின்றனர். துரோகத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட அதிமுக தற்போது துரோகிகளின் கைகளில் உள்ளது.

அதனை மீட்டெடுக்காமல் விட மாட்டோம். திமுக திருந்தி விட்டது என மக்கள் நினைத்து அவர்களுக்கு வாக்களித்து ஆட்சிப் பொறுப்பை கொடுத்தனர். ஆனால், தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாகப் பேசியதால் அந்த கூட்டணியில் இருந்து விலகியதாக பழனிசாமி தெரிவித்தார். 4 ஆண்டுகள் அவர்களின் ஆட்சியை காப்பாற்றியது யார் என்று சிறு குழந்தையை கேட்டால் கூட கூறிவிடும். ‘இண்டியா’ கூட்டணி தற்போது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை, என்றார்.