ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு :4 வது நாளாக பரிசில்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை..!!

சேலம்: தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 50ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் வந்துகொண்டுள்ளது.

இதனை தொடர்ந்து 4 வது நாளாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசில்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் தமிழக காவிரி கரையோரப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கடந்த 4 நாட்களாக ஒக்கேனக்களுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று மலை நிலவரப்படி வினாடிக்கு 35,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, படிப்படியாக அதிகரித்தது இன்று காலை வினாடிக்கு 50,000 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குறிப்பாக மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைகள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து அதிக நீர்வரத்தின் காரணமாக ஒக்கேனக்களுக்கு சுற்றுப்பயணிகள் வர தொடர்ந்து 4-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிக நீர்வரத்தின் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.