ஜனநாயகன்’ படக்குழு, படத்தை மீண்டும் ஆய்வு செய்யும்படி கோரி சான்றிதழ் வழங்கும் அமைப்பை அணுகியதாக கூறப்படுகிறது.அதன்படி, தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படம் அதிகாரப்பூர்வமாக மறுஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக சான்றிதழ் வழங்கும் செயல்முறையில் சில நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. இதனால் சான்றிதழ் வழங்கும் வேலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது அந்த பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டதால், படம் மீண்டும் பரிசீலனைக்கு சென்றுள்ளது. இதனால் விரைவில் சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.
மறுஆய்வு விதிமுறைகளின்படி, சுமார் 20 நாட்களுக்குள் புதிய சான்றிதழ் குழு அமைக்கப்படும். அந்த குழு படத்தை முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்யும். குழு அமைந்த பிறகு, 4 நாட்களுக்குள் சான்றிதழ் வழங்கும் செயல்முறை தொடங்கும் என கூறப்படுகிறது.இந்தப் படத்தில் பாதுகாப்புத் துறை மற்றும் ராணுவம் தொடர்பான சில காட்சிகள் இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. அவற்றுக்கான தேவையான அனுமதிகள் மற்றும் தடையில்லா சான்றுகள் முறையாக சமர்ப்பிக்கப்படாததே முன்பு சான்றிதழ் வழங்கப்படாததற்கான காரணமாக சொல்லப்படுகிறது.
இப்போது அந்த ஆவணங்கள் அனைத்தும் சரி செய்யப்பட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், இந்த முறை சான்றிதழ் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என படக்குழு நம்புகிறது. முன்னதாக ஐந்து பேர் கொண்ட குழு படத்தை பார்த்ததாகவும், இப்போது மறுஆய்வின் போது பத்து பேர் கொண்ட குழு படம் பார்ப்பார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வுக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.
சான்றிதழ் கிடைத்தவுடன் வெளியீட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கலாம். நடைமுறைகள் தாமதமின்றி நடந்தால், மார்ச் மாத வெளியீடு சாத்தியமா என்ற பேச்சும் எழுகிறது. ஆனால் மார்ச் மாதத்தில் தேர்தல்கள் மற்றும் 10ம் வகுப்பு, +2 பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளதால், சரியான வெளியீட்டு தேதியை தேர்வு செய்வதில் தயாரிப்பாளர்கள் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படம் இதுவாக இருக்கும் என்றும், அவரது திரைப்பட பயணத்தில் கடைசி படம் இதுதான் எனவும் பேசப்படுவதால், ‘ஜனநாயகன்’ மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் வரை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.









