அதிகாலையில் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானையை விரட்ட,வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வராததால், தொழிலாளர்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஸ்டான்மோர் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் நுழைந்த அப்பன் டவுன் என்ற ஒற்றை காட்டு யானை, அங்குள்ள பார்வதி என்பவரின் குடியிருப்பின் ஜன்னல் மற்றும் கதவுகளை உடைத்தது. சத்தம் கேட்டு எழுந்த தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும், வனத்துறையினர் வரவில்லை.

தொழிலாளர்கள் சத்தம்போட்டு கூக்குரலிட்டு விடிய விடிய தூக்கமின்றி நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்பு அந்த யானை அப்பகுதியில் இருந்து சென்றுள்ளது. எனவே காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க, கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








