ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையின் போது, இந்திய ராணுவத்தின் மோப்ப நாய் ‘டைசன்’ காட்டிய அபார துணிச்சல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அகினூர் பகுதியில் மறைந்திருந்த மூன்று பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காக பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் டைசன் முக்கியப் பங்காற்றினார். மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை நோக்கி வீரர்களை வழிநடத்திச் சென்ற டைசன் மீது, ஒரு கட்டத்தில் எதிரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த நிலையிலும், டைசன் தன் கடமையிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து வீரர்களுக்குத் துணையாக நின்று இலக்கை அடையாளம் காட்டினார். இந்நிலையில் டைசன் வழங்கிய அந்த துல்லியமான தகவல்கள் மற்றும் வீரத்தின் துணையுடன், பாதுகாப்புப் படையினர் மூன்று பயங்கரவாதிகளையும் வெற்றிகரமாகச் சுட்டுக் கொன்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிய இந்த வீர மோப்ப நாய்க்கு தற்போது ராணுவ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் நாட்டின் பாதுகாப்பிற்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாது போர்க்களத்தில் நின்ற டைசனின் செயலை ‘உன்னதமான தியாகம்’ என ராணுவத்தினர் பாராட்டி வருகின்றனர். “மனிதர்கள் தராத விசுவாசத்தையும் வீரத்தையும் வாயில்லா ஜீவன்கள் வழங்குகின்றன” என்பதற்கு டைசனின் இந்தச் செயல் ஒரு வரலாற்றுச் சான்றாக மாறியுள்ளது.
குண்டு அடி பட்டும் நாட்டை காக்க போராடிய டைசன்…








