தேசிய நெடுஞ்சாலைகளில் தற்போதைய தரவுகளின் படி 72 சுங்கச்சாவடிகள் பயன்பாட்டில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் இந்த சுங்க சாவடிகளின் எண்ணிக்கை 90- ஆக உயர்த்தப்பட இருப்பதாகவும் மத்திய அரசு மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில், சில சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1- ஆம் தேதி மற்றும் மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1- ஆம் தேதி சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கமாகும். அதன்படி, தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் 66 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. இதில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, சேலம் மாவட்டம் ஆத்தூர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், வானகரம், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மற்றும் கணியூர், கீழ்குப்பம், மாத்தூர், கப்பலூர், திருப்பாச்சேத்தி, பரனுர் உள்பட 66 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை சொந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி, கார், ஜீப், வேன் போன்ற இலகு ரக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட ரூ.10 முதல் ரூ.40 வரையும், பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.50 முதல் ரூ.200 வரையும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல, சுங்கச்சாவடி வழியாக அடிக்கடி சென்று வரும் வாகனங்களுக்கு அதன் உரிமையாளர்கள் மாதாந்திர பாஸ் எடுத்திருப்பார்கள். அந்த மாதாந்திர பாஸுக்கான கட்டணம் ரூ.300 முதல் ரூ.350 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வருடாந்திர பாஸ்ட் டேக் பாஸ் விலையையும் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3,075- ஆக உயர்த்த இருப்பதாக முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விலை ஏற்றத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனை தாக்கு பிடிக்க முடியாமல் பொது மக்கள் தவித்து வரும் சூழ்நிலையில், சுங்க கட்டண உயர்வும் பொது மக்களுக்கு மேலும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளதாக கருத்து தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் சுங்க கட்டண உயர்வு காரணமாக ஒவ்வொரு லாரிக்கும், கூடுதல் செலவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.நகரப் பகுதிகளில் சுற்றி 13 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சுங்கச்சாவடி அமைக்க கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால், அதையும் மீறி சேலம் மாவட்டம், கருப்பூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்றக்கோரி அரசியல் கட்சியினர் மற்றும் லாரிகள் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்திய நிலையில், தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மாநில லாரிகள் உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறினார்.








