தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.
முதற்கட்டமாக தமிழகத்தில் 12 கோயில்கள் மாதிரி கோயில்களாகத் தேர்வு செய்யப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, இயற்கை சார்ந்த பொருட்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் தமிழக கோயில்களில் தரிசனம் செய்து விட்டு செல்லும் போது பிளாஸ்டிக்கை அங்கேயே விட்டு செல்கின்றனர். பிளாஸ்டிக் எளிதில் மக்காததால், நிலம், கடல் மற்றும் நீர்நிலைகளில் குவிந்து மாசுபாட்டை ஏற்படுத்தி விடுகின்றன. கடலில் மிதக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணையும் நீர்நிலைகளையும் மாசுபடுத்துகின்றன. விலங்குகளுக்கு பிளாஸ்டிக் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு 2019ம் ஆண்டு தடை விதித்தது. அந்த வகையில் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற பல வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் அவ்வப்போது திடீர் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
ஆனால் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் பிளாஸ்டிக் பொருளுக்கு தடையுள்ள நிலையில் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் உட்பட 12 கோவில்கள் மாதிரி கோயிலாக தேர்வு செய்யபட்டுள்ளன. இந்தக் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதோடு இயற்கை பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சுற்றியுள்ள பகுதிகளில் நெகிழி பயன்பாடு தடைவிதிக்கப்பட்டது நெகிழி பொருட்களுக்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்துதல் மாதிரி திருக்கோயில்களாக செயல்படுதல் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நெகிழிப்பொருட்கள் பயன்படுத்த தடைவிதித்தும். நெகிழிப்பொருட்களுக்கு மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப்பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நெகிழி இல்லா திருக்கோயில்களாக அறிவித்திட திருக்கோயில்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி
1 அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர். சென்னை
2. அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு
3 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணி.
4 அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை
5 அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி.
6 அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்.
7 அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்.
8 அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம்.
9 அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்.
10 அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை.
11 அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி.
12 அருள்மிகு பார்த்தசாரதிசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி.
இது குறித்து வெளியான அரசாணைகள் மற்றும் சுற்றறிக்கைகளின்படி திருக்கோயில்களில் நெகிழி பயன்பாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டதை சீரிய முறையில் செயல்படுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.