ஈரான் தலைவரின் அடுத்த வார்த்தை ரொம்ப முக்கியம்! “அமெரிக்கா தண்டிக்கப்படும்..”உற்று கவனிக்கும் உலக நாடுகள்

தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் போரில் அமெரிக்கா உள்ளே வந்த பிறகு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. அமெரிக்காவின் தலையீட்டால் போர் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டது.இதற்கிடையே அமெரிக்காவின் தாக்குதலை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள ஈரான், அமெரிக்காவுக்கே பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது. இது பதற்றத்தை அதிகரிப்பதாகவே உள்ளது.இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த ஒரு வாரமாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. இந்தச் சூழலில் தான் நேற்றைய தினம் திடீரென அமெரிக்கா இந்த மோதலில் உள்ளே வந்தது. ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது அமெரிக்கா திடீரென தாக்குதலை நடத்தியது. இது அந்த பிராந்தியத்தில் நிலவிய பதற்றத்தைப் பல மடங்கு அதிகரித்தது.அமெரிக்காவின் தாக்குதல் ஈரானில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ஈரான் உயர்மட்ட தலைவர் கமேனி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேலின் வெறுப்பு போக்கு காரணமாகவே இந்த தாக்குதல்கள் நடந்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.மேலும், இதற்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கமேனி கூறினார். மேலும், அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு ஈரான் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் கமேனி எச்சரித்துள்ளார். எதிரிகள் தங்களின் பொறுப்பற்ற செயலுக்குக் கடுமையான தண்டனையை அனுபவிப்பார்கள் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “தண்டனை கொடுப்போம். இஸ்ரேல் ஒரு பெரிய தவறு செய்து, ஒரு பெரிய குற்றத்தைச் செய்துள்ளது; அதற்குத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும், அது கொடுக்கப்பட்டும் வருகிறது; இவர்கள் இப்போது தண்டிக்கப்பட்டு வருகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரானின் ஃபோர்டோவ் உள்ளிட்ட இரு அணு ஆயுத தளங்கள் மீது அமெரிக்கா 30,000 பவுண்டுகள் எடை கொண்ட பங்கர் பஸ்டர் பாம்களை வீசியது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்குத் தான் பதிலடி கொடுக்கும் என்று ஈரான் உறுதியளித்துள்ளது.இது குறித்து ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கூறுகையில், “அமெரிக்கா இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும்” என்று கூறியிருந்தார். மேலும், ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவை அவர் கண்டித்துள்ளார். 1979இல் நடந்த இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரான் மீது மேற்குலக நாடுகள் எடுத்த மிக முக்கியமான ராணுவ நடவடிக்கை இதுவாகும்.இந்த மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கோரியது. அப்போது பேசிய ஐ.நா.வுக்கான ஈரானின் தூதர் அமீர் சயீத் இரவானி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தூதரக உறவுகளை காலி செய்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும், அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் ஒரு அரசியல் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறினார். இது குறித்து இரவானி மேலும் கூறுகையில், “அமைதியான அணுசக்தி ஆய்வுகளை மேற்கொள்ளும் உரிமைகளை உறுதி செய்வதற்குப் பதிலாக எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த தாக்குதல்களைக் கண்டித்தார். இது தொடர்பாக அவர் “ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சு ஒரு ஆபத்தானது. போரை நிறுத்தி, ஈரான் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும்” என்று வலியுறுத்தினார்.ஈரான் அணு உலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளன. இதற்கு ஈரான் தக்க பதிலடி கொடுக்கும் என்று ஈரானும் கூறியுள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் மேலும் ஒரு மிகப் பெரிய போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.