கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை(மே 4, ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
மே மாதம் என்றாலே நினைவுக்கு வருவது சுட்டெரிக்கும் வெயில்தான்.
அதிலும் மே மாதத்தில் 25 நாள்கள் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வரும். இந்த நாள்களில் வெயில் அதிகமாக இருக்கும்.
இந்தாண்டு நாளை, மே 4 ஆம் தேதி தொடங்கும் அக்னி நட்சத்திரம் மே 28 ஆம் தேதி முடிவடையும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்போதே பல்வேறு இடங்களில் 100° பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிவரும் நிலையில், நாளை (மே 4) அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
அதேநேரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. வரும் வாரத்தில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
எனினும் பெரும்பாலான பகுதிகளில் வெயில் அதிகம் இருக்கும் என்பதால் கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்துகிறார்கள்.