தொடர்ந்து சமூக நீதி பேரவை சார்பில் ஒரு சிறப்புச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று (11.06.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி சமூகநீதி பேரவையின் தலைவராக உள்ள பாலுவை நீக்குவதற்கான அதிகாரம் யாருக்கும் கிடையாது. இரண்டில் ஒரு பங்கு நிர்வாகிகள் கூடி முடிவு எடுத்தால் மட்டுமே அவரை பதவியில் இருந்து நீக்க முடியும் என்ற வரையறை இருக்கிறது. அதுதான் அறக்கட்டளையின் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே பாலுவே தொடர்ந்து அதன் தலைவராகச் செயல்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மேலும் இந்த அமைப்பின் புரவலராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.இந்தநிலையில் பனையூர் அலுவலகத்தில் அன்புமணி ராமதாஸ் நிர்வாகிகளிடம் பாமகவில் சமூக நீதிப் பேரவை தலைவராக கோபு நியமிக்கப்பட்டது தொடர்பாக பேசும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ”சமூக நீதிப் பேரவையின் தலைவராக ஒருவரை நியமனம் செய்தார்கள். எனக்கெல்லாம் மிகுந்த அதிர்ச்சி. நியமனம் செய்யப்பட்ட அவர் (வி.எஸ்.கோபு) என்னை பொறுத்தவரை அடிப்படையிலே ஒரு வழக்கறிஞராக கூட இருக்க தகுதி இல்லாதவர்.
வழக்கறிஞர் தன்மையை அவரிடம் எப்போதும் பார்த்தது கிடையாது. எந்த தன்மையும் கிடையாது. அந்த தகுதியும் கிடையாது. அது ஒருபக்கம் இருக்க நம்முடைய வழக்கறிஞர் பாலு தலைமையில் 22 ஆண்டுகள் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கட்சி சார்பில், கட்சி அடிப்படையில் நாங்கள் களத்தில் வேகமாக செயல்பட எங்களுக்கு தைரியம் கொடுப்பது வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை தான். களத்தில் நாங்கள் தைரியமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியத்தை சமூக நீதிப் பேரவை கொடுக்கும்” எனப் பேசினார்.