கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்.32 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடக்கிறது.

கோவை மே 9 கோவை கோட்டைமேட்டில் அருள்மிகு. சங்கமேஸ்வரர் திருக்கோயில் உள்ளது இது பல நூற்றாண்டுகள் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் தைப்பூசம், சித்திரை திருவிழா ஆகிய காலங்களில் தேரோட்டம் நடத்தப்படும். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கோவிலில் கடந்த 1993 ஆம் ஆண்டு சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. அதன் பிறகு கடந்த 32 ஆண்டுகளாக சித்திரை தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது .இந்த நிலையில் ஐகோர்ட் அறிவுறுத்தலின்படி இந்த ஆண்டு சித்திரை தேரோட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கடந்த 4-ந் தேதி இந்த கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து சூரிய பிரபை,சந்திர பிரபை, யானை வாகனம் கைலாச வாகனம், முஷிக ரிஷபவெள்ளி மயில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. இதை தொடர்ந்து இன்று மாலை 6 – 30 மணிக்கு ( வெள்ளிக்கிழமை) திருக்கல்யாணம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை ( சனிக்கிழமை) காலை 10:40 மணிக்கு நடக்கிறது. இதில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமர குருபர சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், அமைச்சர் சேகர்பாபுமற்றும் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைக்கின்றனர் தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு பெருமாள் கோவில் ஒப்பணக்கார வீதி. மாநகராட்சி அலுவலகம் வழியாக மீண்டும் கோவிலை வந்து அடைகிறது நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பரிவேட்டை ,12 – ம் தேதி மாலை 6 – 30 மணிக்கு தெப்ப உற்சவம் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. 14-ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு வசந்த உற்சவம் 15-ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஊஞ்சல் விடையாற்றி உற்சவம் நடக்கிறது.தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.