அடுத்தடுத்த பல திருப்பங்களுடன் கொலை வழக்கு… சசிகலாவை கோடநாடு பங்களாவிற்கு அழைத்து சென்று விசாரிக்க காவல்துறை முடிவு.!!

சசிகலாவை கோடநாடு பங்களாவிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்..

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தின.. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம். இந்த வழக்கில் தொடர்புடையவர்களிடம் காவல்துறையினர் மறு விசாரணை நடத்தியதால் வழக்கு விசாரணை சூடுபிடிக்க தொடங்கியது.. இதையடுத்து இதுதொடர்பாக விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. உதகை ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படைகள் இதுவரை 217 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளது.. மேலும் அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டியிடம் சமீபத்தில் விசாரணை நடத்தப்பட்டது..

இந்த சூழலில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் கடந்த 2 நாட்களாக சசிகலாவிடம் விசாரணை நடத்தினர்.. தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் மேற்கு மண்டல காவல்துறை ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சசிகலாவிடம் விசாரணை நடத்தினர்.. கோடநாடு பங்களாவில் என்னென்ன இருந்தது என்பது பற்றி அறிந்தவர் சசிகலா என்ற அடிப்படையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.. முதல் நாளில் 6 மணி நேரம், 2-வது நாளில் 4 மணி நேரம் என சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது..

இந்நிலையில் சசிகலாவை கோடநாடு பங்களாவிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.. பங்களாவில் இருந்த பொருட்கள், திருடப்பட்டவை எவை என்று, உரிமையாளர் என்ற முறையில் சசிகலா உறுதி செய்வார் என்று கூறப்படுகிறது.. சசிகலா அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் பங்களா மேலாளர் மற்றும் பலரை மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எந்த அறையில் ஆவணங்கள் இருந்தன, எந்த அறையில் பணம், நகைகள் இருந்தன, எங்கே எந்த பொருட்கள் இருந்தது என்பது போன்ற கேள்விகளை கேட்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.. அதன்படி, சசிகலாவின் வாக்குமூலம், மற்றவர்களின் வாக்குமூலத்துடன் ஒத்துப்போகிறதா என்பதையும் ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது..