ஒட்டாவா: கனடா நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி மீண்டும் வெற்றி பெற்றது.
புதிய பிரதமராக மார்க் கார்னி வெற்றி பெற்றார். அவரது அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்று கொண்ட தமிழ் வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் பகவத் கீதையை வைத்து பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். இந்த அனிதா ஆனந்த் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்தார். அரசியல் நெருக்கடியால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இடைக்கால பிரதமராக மார்க் கார்னி செயல்பட்டார். அதன்பிறகு அவரே லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம் இறுதியில் கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது.
இதில் லிபரல் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து மீண்டும் மார்க் கார்னி பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில் தான் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது. மொத்தம் 28 அமைச்சர்கள், 10 மத்திய இணை அமைச்சர்கள் என்று மொத்தம் 38 பேர் இடம் பெற்றனர். இதில் 24 பேர் புது முகங்களாகும்.
இந்த அமைச்சரவையில் தமிழக வம்சாவளியை சேர்ந்த ஆனந்த் இடம்பெற்றுள்ளார். அவருக்கு வெளியுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அனிதா ஆனந்த் பகவத்கீதையை வைத்து அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
இதன்மூலம் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்படும் முதல் இந்து பெண் என்ற பெருமையை அனிதா ஆனந்த் பெற்றுள்ளார். பகவத் கீதையை வைத்து அனிதா ஆனந்த் பதவியேற்ற வீடியோவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ”கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றுள்ளதில் பெருமை கொள்கிறேன். பிரதமர் மார்க் கார்னியுடன் மற்றும் அவரது டீமுடன் சேர்ந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். நாட்டின் பாதுகாப்பு, நியாயமான உலகத்தை உருவாக்குதல் மற்றும் கனடா மக்களுக்கான நலன்களை பாதுக்கும் வகையிலும் பணியாற்றுவேன்” என்று கூறியுள்ளார்.
தற்போது கனடா வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள அனிதா ஆனந்த் பெற்றோர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். தந்தை பெயர் ஆனந்த். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். டாக்டராக இருந்தார். தாய் பெயர் சரோஜ். இவர் பஞ்சாப்பை சேர்ந்தவர். இவரும் டாக்டர் ஆவார். அனிதா ஆனந்த் கனடாவிலேயே பிறந்து வளர்ந்தவர். இப்போது 58 வயது ஆகிறது. 4 டிகிரிகளை முடித்துள்ளார். குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் இளநிலை பிரிவில் Arts in Political Studies என்பதை படித்து முடித்தார். அதில் தங்கப்பதக்கம் வாங்கினார். அதன்பிறகு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இளநிலை பிரிவில் Jurisprudence படிப்பையும், தல்ஹசி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பையும், டொரண்டோ பல்கலைகழகத்தில் சட்ட மேற்படிப்பையும் முடித்தார்.
இதன்மூலம் அனிதா ஆனந்த் அடிப்படையில் வழக்கறிஞர் ஆவார் . இவர் கடந்த 2015ம் ஆண்டில் பொது வாழ்க்கைக்குள் நுழைந்தார். அவர் ஒன்டாரியோ அரசின் நிபுணர் குழுவில் இடம்பிடித்தார். அதன்பிறகு கடந்த 2019ம் ஆண்டில் ஒக்வில்லி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு கொரோனா பரவல் சமயத்தில் பொதுசேவை மற்றும் கொள்முதல் பிரிவின் அமைச்சராக செயல்பட்டார். அனிதா ஆனந்துக்கு திருமணமாகி விட்டது. கணவர் பெயர் ஜான் நோல்டன். இவரும் கனடாவில் வழக்கறிஞராகவும், பிசினஸ் எக்ஸிக்கியூட்டிவ்வாகவும் செயல்பட்டு வருகிறார். இந்த தம்பதிக்கு மொத்தம் 4 குழந்தைகள்.
முன்னதாக கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்த பிறகு அனிதா ஆனந்த் லிபரல் கட்சி சார்பில் பிரதமர் ரேஸில் இருந்தார். ஆனால் மார்க் கார்னிக்கு ஆதரவு பெருகியதால் இந்த முறை அனிதா ஆனந்துக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மாறாக அவர் கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்பட உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.