பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வருகிறது- பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு.!

சென்னை: பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறி வருகிறது என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகஉளவுத் துறை ஆழ்ந்த உறக்க நிலையில் உள்ளது. இதனால், தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. மங்களூரு குண்டுவெடிப்பு குறித்த முதல்கட்ட விசாரணையில், ஷரீக், போலி அடையாள அட்டையை காட்டி, கோவையில் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

கோவை கார் வெடிப்பு ஒரு பயங்கரவாத செயல் என்று பாஜக ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறது. அரசுஅதை தொடர்ந்து மறுக்கிறது. ஷரீக் கோவையில் தங்கியது மற்றும் தண்டனையின்றி செயல்படும் பயங்கரவாதிகளுடன் அவருக்கு உள்ள தொடர்பு குறித்து பாஜக சந்தேகம் எழுப்புகிறது. அதையும் அரசு மறுக்கிறது.