டி20 உலகக் கோப்பை!! சபாஷ் சரியான போட்டி.!

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுடனான ஆட்டத்தில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.இந்தியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட தங்கள் அணி இந்தியாவுக்கு வராது என வங்கதேசம் அறிவித்தது. இதனால், அந்த அணியை நீக்கிவிட்டு ஸ்காட்லாந்து அணியை சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் சோ்த்தது. வங்கதேச அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்திருந்தது.  இந்த விவகாரம் தொடா்பாக ஐசிசி, பாகிஸ்தான் வாரியம், வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் ஆகியவை இடையேயான முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அந்த வாரியத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, முத்தரப்பு பேச்சுவாா்த்தையின்போது ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவா் மோசின் நக்வி சில கோரிக்கைகளை முன்வைத்தாா். அவை, இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடா்களை மீண்டும் தொடங்குவது, உலகக் கோப்பை போட்டியிலிருந்து நீக்கப்பட்ட வங்கதேசம் சந்தித்துள்ள நஷ்டத்தை ஈடு செய்ய, அந்த அணியை உள்ளடக்கிய முத்தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இதில் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடா் ஐசிசி அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது எனும் நிலையில், முத்தரப்பு தொடருக்கான வாய்ப்பையும் ஐசிசி மறுத்துள்ளது. எனினும், 19 வயதுக்கு உள்பட்ட ஆடவருக்கான அடுத்த உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை வங்கதேசத்துக்கு வழங்க பரிசீலிப்பதாக ஐசிசி கூறியிருக்கிறது. இதனால், இந்தியாவுடனான ஆட்டத்தில் விளையாடுமாறு மோசின் நக்வியிடம், வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவா் அமினுல் இஸ்லாமும் பரிந்துரைத்ததாகத் தெரிகிறது.

இதையடுத்து, இலங்கை, அமீரக கிரிக்கெட் வாரியங்களுடனும் பேசிய மோசின் நக்வி, இதுதொடா்பாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃபிடம் விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, வங்கதேசம், இலங்கை, அமீரக வாரியங்கள் பரிந்துரைத்ததன் அடிப்படையில், இந்தியாவுடனான ஆட்டத்தில் பாகிஸ்தான் விளையாடுவதற்கு ஒப்புதல் அளிக்குமாறு பிரதமா் ஷெரீஃபிடம் அவா் கேட்டுக்கொண்டாா் என்று அந்த வட்டாரங்கள் கூறின. இந்நிலையில், இந்தியாவுடனான ஆட்டத்தைப் புறக்கணிக்கும் முடிவை பாகிஸ்தான் திரும்பப் பெற்றது. திட்டமிட்டபடி இந்தியாவுடனான ஆட்டத்தில் பாகிஸ்தான் பங்கேற்கும் என பாகிஸ்தான் அரசு திங்கள்கிழமை இரவு தெரிவித்தது. இந்தியா-பாகிஸ்தான் மோதும் ஆட்டம் கொழும்பில் பிப். 15-ஆம் தேதி நடைபெறுகிறது..