வலுக்கும் ஒற்றைத் தலைமை… அதிமுக அலுவலகத்தில் தீர்மானக் குழுவினர் முக்கிய ஆலோசனை..!!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ளது.

அந்த வகையில்,நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியிருந்தார்.இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்:”பிரதமர் மோடி வலியுறுத்தியதால்,முன்னதாக அதிமுக ஆட்சியில் துணை முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டேன் என்றும் துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.இதனிடையே,சேலம் சென்றிருந்த இபிஎஸ்-யும்,அங்கு தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில்,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு தீர்மானக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி,செம்மலை,ஆர்பி உதயக்குமார், பொன்னையன் மற்றும் வைகைச் செல்வன் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.பொதுக்குழுவில் கொண்டு வரவுள்ள தீர்மானங்கள் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே,ஒற்றை தலைமை பேச்சால் பரபரப்பு நிலவி வரும் நிலையில், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 4-ஆவது நாளாக தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.ஆரணியில் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சென்ற நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த ஆலோசனையில்,துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன்,மைத்ரேயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.