பணமழையில் நனையும் சபரிமலை தினக்கூலி ஊழியர்கள் !

சபரிமலையில் சீசனின்போது பணிபுரிந்த தற்காலிக தினக்கூலி ஊழியர்கள் கணக்கில் ஏராளமான பணம் புழங்கியது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் அண்மைக்காலங்களில் பல்வேறு குளறுபடிகள் காரணமாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஐயப்பன் கோயில் துலாரபாலகர்கள் தங்கக் கவசம் திருடப்பட்டது தொடர்பான வழக்கு கேரள மாநில அரசையே ஆட்டம் காணச் செய்திருப்பதுடன் பக்தர்களின் உணர்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது.

இந்நிலையில், சபரிமலையில் தினக்கூலி ஊழியர்கள் தங்கள் வீடுகளுக்கு அதிக அளவில் பணம் அனுப்பியது தொடர்பாக தேவஸ்தானத்தின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் சீசனின்போது தினக்கூலி ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவது வழக்கம். சீசன் முடிந்ததும், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் இம்முறை தினக்கூலி ஊழியர்கள் சிறுகச் சிறுக பெரும்தொகையினை அங்குள்ள தபால் நிலையம், வங்கிகள் மூலமாக அனுப்பியிருப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக விசாரணையைத் தொடங்கிய தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள், சில தற்காலிக ஊழியர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து தற்காலிக தினக்கூலி ஊழியர்களின் வங்கிக் கணக்குகளை விஜிலென்ஸ் அதிகாரிகள் ஆய்வுசெய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.