ஈஷாவில் எஸ்.பி.வேலுமணி – பிரேமலதா.!

கோவை ஈஷாவில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்தது கவனம் பெற்றுள்ளது. தேமுதிக இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் இணைகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பம்பரமாய் சுழன்று தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. தற்போதைய சூழலில் தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டி நிலவினாலும், ஆளும் திமுகவும், ஆண்ட அதிமுகவும் பலம் பொருந்திய கூட்டணியுடன் களம் இறங்கத் தயாராகி வருகின்றன. அந்த வகையில், பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணி நிலைப்பட்டை அறிவித்துவிட்டன.
ஆனால், தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது. கடந்த மாதம் 9ஆம் தேதி கடலூரில் நடைபெற்ற மாநாட்டில் தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கும் என உறுதிப்பட கூறியிருந்தார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா. இதனால் தேமுதிகவின் மாநாட்டின் மீதான கவனம் அதிகரித்தது. ஆனால், மாநாட்டில் பேசிய பிரேமலதா, மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கூட்டணி நிலைப்பாட்டை எடுத்துவிட்டதாகவும், தெளிவாக சிந்தித்து ஒரு மகத்தான கூட்டணியை விரைவில் அறிவிப்போம் என்றும் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி 23ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மதுராந்தகத்தில் நடைபெற்ற என்.டி.ஏ. பொதுக்கூட்டத்திலும் தேமுதிக பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், என்.டி.ஏ. கூட்டணி தலைவர்கள் தேமுதிக குறித்து பதிலளிக்க மறுத்து விட்டனர். இதனால் எதிர்பார்த்தபடி, என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து, குடியரசு தினத்தை ஒட்டி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், தேமுதிக பொருளாளர் சுதீஷும் சந்தித்து பேசியது கவனம் பெற்றது. இதனிடையே, திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனும் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகின. தேமுதிக இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்பதாகவும், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்க வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டது. மாநிலங்களவை சீட்டை ஒதுக்க ஒப்புக்கொண்டாலும், இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வழங்க இரு கட்சிகளுமே தயாராக இல்லை எனத் தகவல்கள் வெளியாகின. இரண்டு பக்கமும் கூட்டணி பேசுவதா என தேமுதிகவை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளிப்படையாகவே காட்டமாக விமர்சித்த நிலையில், நாங்கள் இரண்டு பக்கம் கூட்டணி பேசவில்லை என விளக்கம் அளித்தார் பிரேமலதா.
இந்நிலையில், கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சந்திப்பு அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது மத்திய அமைச்சர் எல்.முருகன் உடனிருந்தார். முன்னதாக, வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியாகும் பிப்ரவரி 17ஆம் தேதிக்கும் முன்பு கூட்டணி நிலைப்பாட்டை அறிவிப்பதாக பிரேமலதா கூறியிருந்தார். வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு தள்ளிப்போயிருந்தாலும், தேமுதிக கூட்டணி அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.