தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்ட பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மானியம் கொடுக்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். (04.3.2026) தலைமை செயலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் இத்திட்ட பயனாளிகளுக்கு மானியத்தை காசோலையாக வழங்கினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், சமூகநீதி அடிப்படையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கினை மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை (Tamil Nadu Women Entrepreneur Empowerment Scheme TWEES) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், ஐந்து ஆண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ; 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மகளிர் நலன் காக்க சுய உதவிக் குழுக்கள் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண், தோழி பணிபுரியும் பெண்கள் விடுதியென பல்வேறு முன்னோடித் திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வண்ணம் நமது அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் 10 இலட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள். விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்பிற்கிணங்க, தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தகுதியுடைய பெண் தொழில்முனைவோர்கள், அதிகபட்சம் ரூ.10 இலட்சம் வரை வங்கிக் கடன் பெற்று புதிய தயாரிப்பு, சேவை அல்லது வணிக நிறுவனங்களை தொடங்கலாம். மேலும், தொழில் விரிவாக்கத்திற்காக கடன் பெற விரும்பும் கலைஞர் கைவினைத் திட்ட (KKT) பெண் பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கூடுதல் கூடிய கூடுதல் கடன் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 261.93 கோடி ரூபாய் மானிய மதிப்பிலான 22,356 விண்ணப்பங்கள் இணையவழியாக பெறப்பட்டு அவற்றில் 160.89 கோடி ரூபாய் மானிய மதிப்பிலான 13,779 விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில், 27.01 கோடி ரூபாய் மானியத்திற்கான 2,261 விண்ணப்பங்களுக்கு கடன் ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல் ஆனந்த் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.







