கோவை, ஜூன் 14-
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜெய்சன் (55). இவர் அங்கு நகை பட்டறை வை நகைகள் ஆர்டர் எடுப்பதற்காக அவர் அடிக்கடி சென்னை மற்றும் கோவைக்கு வந்து செல்வார். இங்கு தங்க கட்டிகளை வாங்கிச் சென்று அதனை நகைகளாக பட்டறையில் தயாரித்து நகைக்கடைகளுக்கு கொடுப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 12ம் தேதி ஜெய்சன் மற்றும் அவரது கடையில் பணிபுரியும் விஷ்ணு ஆகிய இருவரும் ஏற்கனவே தயாரித்த தங்க நகைகளுடன் காரில் கோவைக்கு வந்தனர். பின்னர் ரயில் மூலம் சென்னை சென்றுள்ளனர். அங்கு தயாரித்த நகைகளை சப்ளை செய்து விட்டு மீண்டும் 1கிலோ 250 கிராம் தங்கக் கட்டியை வாங்கிக் கொண்டு நேற்று இரவு ரயில் மூலம் கோவைக்கு புறப்பட்டனர். இன்று காலை ரயில் மூலம் கோவைக்கு வந்த ஜெய்சன் மற்றும் விஷ்ணு ஆகிய இருவரும் தங்க கட்டியுடன் காரில் புறப்பட்டு சென்றனர். பாலக்காடு சாலையில் காரில் சென்று கொண்டிருந்த போது
எட்டிமடை பெட்ரோல் பங்க் அருகே திடீரென லாரி ஒன்று அவர்களது காரை வழிமறித்தது. லாரியிலிருந்து 5 பேர் கொண்ட கும்பல் கீழே இறங்கி கார் கதவுகளை தட்டி உள்ளனர். ஜெய்சன் சுதாரித்துக் கொண்டு காரின் கதவை திறக்காமல் இருந்துள்ளார். அப்போது அந்த கும்பல் ஆயுதங்களால் காரின் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர். பின்னர் கார் கதவை திறந்து சிலர் காருக்குள் ஏறி கடத்தி சென்றனர். சிறிது தூரம் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஜெய்சன் மற்றும் விஷ்ணுவை இறக்கி விட்டு கார் மற்றும் 1 கிலோ 250 கிராம் தங்க கட்டியுடன் மர்ம நபர்கள் தப்பி சென்றனர். கார் மற்றும் தங்க கட்டியை பறிகொடுத்த ஜெய்சங்க மற்றும் விஷ்ணு இருவரும் சாலையில் பரிதவித்தபடி நின்றனர் .பின்னர் அவர்கள் இது குறித்து க.க.சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ஜெய்சன் ஓட்டி வந்த கார் குறித்த விபரங்களை போலீசார் அனைத்து வாகன சோதனை போலீசாருக்கும் தெரிவித்துள்ளனர். காரில் தப்பிச் சென்றவர்கள் கேரள மாநிலத்திற்குள் சென்று இருக்க வாய்ப்பு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். மேலும் ஜெய்சன் தங்க கட்டியுடன் வரும் தகவல் எப்படி மர்ம நபர்களுக்கு கிடைத்தது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டியை மர்ம நபர்கள் வழிமறித்து பறித்துக் கொண்டு தப்பிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே காரில் சென்ற நகை பட்டறை அதிபரிடம் ரூ.1.30 கோடி தங்கம் கொள்ளை. லாரியில் வந்த கும்பல் கைவரிசை .
