பகுத்தறிவாளர்கள் தான் அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள்..

சென்னை: குருவை வணங்குபவர்களை அயோக்கியன், முட்டாள், காட்டுமிராண்டி எனச் சொல்லும் பகுத்தறிவாளர்கள் தான் உண்மையான அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த அவர் இவ்வாறு பேசியிருக்கிறார். அவர் பேசியதாவது, “நாம் குரு மகராஜ் என்று சொல்லும்போது, ஒவ்வொருவரும் வெவ்வேறு மதங்களை சார்ந்திருக்கலாம். இருப்பினும் குரு என்கிற தத்துவம் ஒன்றுதான். குரு என்பது கடவுளின் நிகழ்கால வாழும் உருவம். கடவுளின் காலை பிடித்துக்கொள்வது ரொம்ப கஷ்டம். ஆனால், குருநாதரின் கால்களை பற்றிக்கொள்வது ரொம்பவும் எளிது. நாம் கைவிடப்பட்ட சூழலில் இருக்கும்போது, நமக்கு கை கொடுப்பது என்பது குருநாதரின் அருளால் மட்டும்தான் முடியும். தமிழ்நாட்டில் பகுத்தறிவாளர்கள், குருவை கடவுளின் சொரூபமாக பார்ப்பதால் நம்மை அயோக்கியன், முட்டாள், காட்டுமிராண்டி என்றெல்லாம் சொல்லலாம். நான் சொல்கிறேன். அப்படி சொல்கிறவர்கள்தான் அயோக்கியர்கள், முட்டாள்கள், காட்டுமிராண்டிகள்” என பேசியிருக்கிறார். ஏற்கெனவே திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கொடுத்திருந்த உத்தரவானது, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்கையில் நீதிபதியின் பேச்சுக்கள் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. முன்னதாக தமிழகத்தில் சமூகம் சீர்கேட்டை நோக்கி போய்க்கொண்டிருப்பதை உணர முடிவதாக, அவர் பேசியிருந்ததும் விவாதங்களை தூண்டியிருந்தது. முன்னதாக அவர் பேசியதாவது, “எல்லா மதத்தை சார்ந்தவர்களும் எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர்களாக இருக்காங்க. சமீபத்துல ஒரு இஸ்லாமிய பெரியவரோட நான் உரையாடிக் கொண்டிருந்தேன்.

நம்ம எல்லோருக்கும் தெரியும், இஸ்லாத்தில் உருவ வழிபாடு என்பது கிடையாது. நாங்கள் மனம் விட்டு தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்ததால், “சார் நாங்கள் பள்ளிவாசல் போகிறோம் தினமும் தொழுகையை செய்கிறோம் ஆனாலும் கவன சிதறல் ஏற்படுகிறது. மனம் ஒரு முகப்படவில்லை” என்று மனம் விட்டு என்னிடம் கூறியிருந்தார். மனம் ஒருமுகப்படுவதில்லை என்பது எல்லோருக்கும் இருக்கக் கூடிய பிரச்சினைதான். தியான மையத்தில் தியான மார்க்கம் என்கிற நுட்பம் இருக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் உரித்தானது கிடையாது. அனைத்து மதத்தினருக்கும் பொதுவானது. தியானத்தின் நுட்பங்களை ஒரு இஸ்லாமியர் உள்வாங்கிக் கொண்டால் அவர் மிகச்சிறந்த முறையில் நமாஸ் செய்ய முடியும் என்பதாக நான் புரிந்து கொள்கிறேன். நம்முடைய தேசத்திற்கு நமக்கு என ஒரு பாரம்பரியம் இருக்கிறது. நமக்கென அறம் சார்ந்த வாழ்க்கை சரி, தவறு என வாழ்க்கை இருக்கிறது. இன்று இந்து பத்திரிகையில் 2வது பக்கத்தில் முழு பெருசான கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அதில் ‘ethical naan monogamous relationship’ என தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய ஒரு ட்ரெண்டை பற்றிய முழுநீள கட்டுரை வெளியாகி இருந்தது.

நாம் அனைவரும் ஒருவனுக்கு ஒருத்தி என்கிற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த கட்டுரை இப்போது எல்லாம் அப்படி கிடையாது. கணவன் மனைவி இடையே புரிதல் இருந்தால், சம்மதம் இருந்தால் ஒருவர் பலருடன் இருக்கலாம் என்கிற விஷயத்தை எத்திக்கல் என்கிற வர்ணனையுடன் அந்த கட்டுரையை கொண்டு சென்றிருந்தனர். சமுதாயம் எவ்வளவு சீர்கெட்டை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதை இதை வைத்து உணர முடிகிறது.

நம்முடைய பாரத சமுதாயத்திற்கு அடிப்படை என்பது குடும்பம் தான். இந்த குடும்பத்தில் உறவு, ஒழுக்கம் உள்ளிட்ட எல்லாவற்றையும் காப்பாற்றப்பட வேண்டுமெனில் நிச்சயமாக நாம் தியான முறைகளோடு ஒட்டி வாழ்க்கை முறையை அமைத்திருந்தால், தேச கலாச்சாரம் என்பதை காப்பாற்ற முடியும். எனக்கு முன்னர் பேசியவர்கள் நமக்கென தனியான வாழ்க்கை முறை இருக்கிறது அதை காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அதை அப்படி காப்பாற்ற வேண்டும் எனில் தியான முறையுடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்” என நீதிபதி பேசியிருந்தார்.