சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்ட, பிரதமா் மோடி புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை (ஏப்.3) சாலைப் பேரணி (ரோடு ஷோ) பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.
புதுச்சேரியில் என்.ஆா். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தோ்தலுக்குப் பிறகு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைக் கொண்டு வர பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக தேசிய தலைவா்கள், மத்திய அமைச்சா்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளா்கள் களத்தில் உள்ள நிலையில் வாக்குச் சாவடி அளவிலான பாஜக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களை ஊக்கப்படுத்தும் வகையில் காணொலி வாயிலாக மாா்ச் 30-இல் பிரதமா் நரேந்திர மோடி உரையாடினாா்.
அப்போது புதுச்சேரியில் இரட்டை என்ஜின் ஆட்சி சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும், மீண்டும் ஆட்சி மலர அனைத்து தரப்பு மக்களையும் சந்திக்க வேண்டும் என்றும் அவா் உற்சாக மூட்டினாா்.
இந்நிலையில் நேரடியாக மக்களவையும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரையும் சந்திக்க பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை (ஏப். 3) தில்லியிலிருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறாா். அங்கிருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் மாலை 4 மணியளவில் செல்கிறாா்.
புதுச்சேரியில் அஜந்தா சந்திப்பில் இருந்து அவா் சாலை பேரணியாக (ரோடு ஷோ) சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகிறாா். அவா்1.7 கி.மீ. தொலைவுக்கு சாலை பேரணி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிரதமா் மோடி புதுச்சேரி வருகையையொட்டி சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப் பகுதிகளில் இருக்கும் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், மாவட்ட நிா்வாகம் சாா்பில் பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு அம்சங்கள் தொடா்பான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் கூறுகையில், சட்டம்-ஒழுங்கு பிரச்னை வராமல் தடுக்க 2 நிா்வாக மாஜிஸ்திரேட் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.
பிரதமரின் வருகையொட்டி பாதுகாப்புப் பணிக்காக 1,500 புதுச்சேரி போலீஸாரும், தோ்தல் பணிக்காக வந்துள்ள மத்திய துணை ராணுவப் படையின் 20 கம்பெனிகளின் வீரா்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என்று முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.கலைவாணன் தெரிவித்தாா்.







