வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரிப்பது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் – உயர்நீதிமன்றம் மதுரை கிளை.!!

சென்னை: புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல் போலீசார் விசாரிப்பது , காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை என்பது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கடுமையாக சாடியுள்ளது.

ஒரு வெளிப்படையான குற்றம் வெளிப்பட்டால், காவல்துறையினர் உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

மதுரை தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் , நான் மதுரை தல்லாகுளம் பகுதியில் எல்.கருப்பையா என்பவரிடமிருந்து ஒரு குடியிருப்பு நிலத்தை வாங்கினேன். இதற்காக வாங்கிய தொகையை செலுத்திய பிறகும், கூடுதல் பணம் கேட்டு, நான் கொடுத்த ஆவணங்களை தர மறுக்கின்றனர். அதிக வட்டி கேட்டு துன்புறுத்துகின்றனர். இதுகுறித்து நான் காவல்துறையில் அளித்தும், காவல்துறையினர் வழக்கு பதியாமல், இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

‘எனது வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ஆறுமுகம் என்பவரிடம் ரூ.3 லட்சம் கடனாக வாங்கியிருந்தேன். அதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.6 லட்சம் வரை கொடுத்து விட்டேன். ஆனால், எனது வீட்டு அசல் பத்திரங்களை வைத்துக் கொண்டு தர மறுப்பதுடன், அதிக வட்டி கேட்டு மிரட்டுகிறார். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், எனது அசல் பத்திரங்களை திருப்பி தருமாறும் உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதனால், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இது போன்ற புகார்களில், போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அழைத்து விசாரணை நடத்துவதாக தெரிய வருகிறது. இது கட்டப் பஞ்சாயத்து நடத்துவதற்கு சமமாகும் என தெரிவித்த நீதிபதி, புகார் தொடர்பான முதற்கட்ட விசாரணையின் நோக்கம் புகாரை ஆராய்வது மற்றும் புகார்தாரரால் வழங்கப்பட்ட துணைப் பொருட்களைப் பார்ப்பது மட்டுமே. வழக்கின் ஆரம்ப விசாரணையின் போது ஒரு நபருக்கு போலீசார் சம்மன் அனுப்ப இயலாது.

ஒரு வெளிப்படையான குற்றம் வெளிப்பட்டால், காவல்துறையினர் உடனடியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணையைத் தொடர வேண்டும். பிரிவு 173(3)-ன் கீழ் எந்தவொரு விசாரணையும், துணை போலீஸ் சூப்பிரண்டின் ஒப்புதலுக்குப் பிறகு 14 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். மேலும் அதன் முடிவு அதிகாரிக்கு தெரிவிக்கப்பட வேண்டும். அத்துடன் மனுதாரர் மனு குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.