வானில் இருந்து வீசப்பட்ட துண்டு பிரசுரங்கம்

மெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய ராணுவ நடவடிக்கை இன்று 15ஆவது நாளை எட்டியுள்ளது.போர் சூழலுக்கு இடையே, இந்தியாவுக்குத் தேவையான 2 எல்பிஜி கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியே கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் நேற்று மீண்டும் ஒரு மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. நகரின் பல பகுதிகள் கரும்புகையால் சூழப்பட்டன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு ராணுவ நடவடிக்கை 15ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் முக்கிய நகரங்களில் நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அல்-குத்ஸ்  தினப் பேரணிகளை நடத்தினர். தெஹ்ரானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஜவாடியே மற்றும் பெர்யானக் ஆகிய குடியிருப்புப் பகுதிகள் மீது வான்வழித் தாக்குதல்களால், தரைமட்டமான கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி காயமடைந்தவர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
மறுபுறம், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி, ஈரான் ஏவிய ஏவுகணைகள் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஜர்சிர் நகரைத் தாக்கின. இதில் வீடுகள் சேதமடைந்ததுடன், சுமார் 60 பேர் காயமடைந்தனர். துபாயில் உள்ள உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா அருகே பறந்து வந்த ஈரானிய ட்ரோனை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்தன. இருப்பினும் ட்ரோன் வெடித்தபோது ஏற்பட்ட சிதறல்கள், டவுன்டவுன் பகுதியில் உள்ள சில கட்டடங்களின் மீது விழுந்ததில் சிறிய அளவிலான விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், ஈராக் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 6 வீரர்களும் உயிரிழந்ததை அமெரிக்க மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியது. இது எதிரி நாட்டுத் தாக்குதலால் நடக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதற்றமான சூழலுக்கு இடையே, லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் வடக்கு மற்றும் மையப்பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.அல்-அப்பாசியா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல், இஸ்ரேலிய ஏவுகணை ஒன்று ஒரு கட்டிடத்தின் மீது நேரடியாகப் பாய்ந்ததில், அதன் ஒரு பெரிய பகுதி தகர்க்கப்பட்டது. பெய்ரூட்டின் புர்ஜ் ஹம்மூத் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதல் நடத்தியது.
இதில் 5 குழந்தைகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். பெய்ரூட்டின் ஹம்ரா, வர்டுன் மற்றும் மார் எலியாஸ்  ஆகிய பகுதிகளில் மிகத் தாழ்வாகப் பறந்த இஸ்ரேலிய விமானங்கள் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை வீசின. இந்த பிரசுரங்களில் “லெபனானின் எதிர்காலம் உங்கள் கையில்”, “ஹிஸ்புல்லாவை நிராயுதபாணியாக்குங்கள்” போன்ற வாசகங்களுடன் QR கோடுகள் அச்சிடப்பட்டிருந்தன. இது லெபனான் மக்களை உளவாளிகளாகச் சேர்ப்பதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.லெபனான் ராணுவம் தனது குடிமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கையில், அந்த QR கோடுகளை எக்காரணம் கொண்டும் ஸ்கேன் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. போருக்கு மத்தியிலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்குச் சொந்தமான இரண்டு எல்பிஜி டேங்கர் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்தது.

இந்த கச்சா எண்ணெய் கப்பல், போர்ப் பதற்றங்களுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து இன்று இந்தியாவை வந்தடைய உள்ளது. இது சுமார் 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை சுமந்து வருகிறது. இது இந்தியாவில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க உதவும் என கருதப்படுகிறது.