மதுரையில் வரும் 21ம் தேதி இந்து முன்னணி அமைப்பு சார்பில், பாஜக, சங் பரிவார் அமைப்புகள் இணைந்து முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரையில் மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்றிருந்த இயக்குநர் அமீர், “முருகன் எங்களுக்கு எதிரி கிடையாது. அவர் பெயரில் அரசியல் செய்பவர்கள்தான் எங்கள் எதிரி” என்று விமர்சித்திருக்கிறார்.மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில், மதுரையின் மத நல்லிணக்க மரபை பாதுகாக்க வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்றது. உலகத் தமிழ்ச் சங்கம் முன்பு நடைபெற்ற இந்த இயக்கத்தில் திமுக கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றிருந்தனர். அதேபோல இதில் பங்கேற்றிருந்த அமீர் பேசியதாவது,”இந்த மனித சங்கிலியின் நோக்கம், முருகன் எங்களுக்கு எதிரானவர் அல்ல! முருகன் பெயரால் அரசியல் செய்கிற சதிகாரர்கள்தான் எங்களுக்கு எதிரானவர்கள்! என்பதுதான். நீதிமன்றம்தான் வழிகாட்டுதல் கொடுத்துருச்சு, அப்பறம் எதுக்கு நீங்க இந்த மனித சங்கிலியை நடத்துகிறீர்கள் என்று கேள்வி எழலாம். நீதிமன்றம் எத்தனை முறை வழிகாட்டுதல் சொன்னாலும், இந்து அமைப்புகளின் மாநாட்டின் உண்மையான நோக்கம் மக்களுக்கு புரியும் வரை நாங்கள் இயக்கங்களை நடத்துவோம்.பக்தி என்கின்ற பெயரால் ஆன்மீக மாநாடு இங்கே பல நூற்றாண்டுகளாக நடந்துகிட்டுதான் இருக்கு. ஆனால், மாநாட்டில் அரசியல் செய்யும் போது, அரசியல் கட்சிகள் மத மாநாட்டை நடத்தும்போது, அது ஆபத்தானது என்று சொல்வதுதான் எங்களுடைய நோக்கம். பொதுவாக மொத்தத்துல நீங்க புரிஞ்சுக்க வேண்டியது, இங்கே கூடி இருக்கிற யாருமே முருகனுக்கு எதிரானவர்கள் அல்ல. முருகன் பெயரால் கலவரம் செய்ய துடிக்கின்ற சங்கிகளுக்கு எதிரானவர்கள் என்பதைதான்” என்று கூறியுள்ளார்.முன்னதாக திருமாவளவன் பேசுகையில், “இந்த மனித சங்கிலி போராட்டம், முருக பக்தர்களுக்கு எதிரானது அல்ல. முருக பக்தர்கள் சனாதனுக்கும், சதி அரசியலுக்கும் இறையாகிவிட வேண்டாம், பலியாகி விட வேண்டாம் என்று சுட்டிக் காட்டுவதற்காகத்தான் நாங்கள் இங்கே குவிந்திருக்கிறோம், கூடியிருக்கிறோம், கைகோர்த்து நிற்கிறோம்.மதுரை மண் மத நல்லிணக்கத்திற்கு பேர் போன மண். குறிப்பாக திருப்பரங்குன்றத்தில், இஸ்லாமியர்களும் இந்துக்களும் சகோதரத்துவத்தோடு ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் இஸ்லாமியர்களை பகைத்துக் கொள்ளவில்லை. அதை போல் இஸ்லாமியர்கள் இந்துக்களை பகையாக கருதவில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழலில் திருப்பரங்குன்றத்திலே ஏதோ பகைமை இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள்.முருக பக்தர்களுக்கு இவர்கள் ஏதோ பாதுகாவலர்கள் என்பதைப் போல காட்டிக் கொண்ட முயற்சிக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒவ்வொருவரும் முருக பக்தர்கள்தான். முருகனை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. முருகனை வழிபடாதவர்கள் யாரும் இல்லை. எல்லா கட்சிகளிலும் முருக பக்தர்கள் உண்டு. அனைத்து கட்சி தோழர்களும் முருகபக்தர்களாக இருக்கிறார்கள்.நாங்கள் யாரும் இந்த கோரிக்கை வைக்கவில்லை. எங்களுக்காக மாநாடு நடத்துங்கள் என்று எந்த கட்சியைச் சார்ந்த முருக பக்தர்களும் கோரிக்கை வைக்கவில்லை. பாஜகவினர் அவர்களின் அஜந்தாவை, செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, பாஜகவை இங்கு வளர்ப்பதற்காக மதத்தின் அடிப்படையிலே அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இந்த உத்தியை கையாளுகிறார்கள். இதற்கு முருக பக்தர்கள் ஏமாந்து விட வேண்டாம் என்று இந்த மனித சங்கிலி போராட்டத்தின் ஊடாக வேண்டுகொள்கிறோம்.
எங்களுக்கு எதிரி முருகன் கிடையாது.. அவர் பெயரில் அரசியல் செய்பவர்கள்தான்! – நடிகர் அமீர்
