தெஹ்ரான்: ஈரான் மீது இன்று அமெரிக்கா மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. ஈரானுக்குச் சொந்தமான மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியிருக்கிறது.அமெரிக்காவின் இந்த தாக்குதலால் அணு கசிவு ஏற்படலாம் என்ற அச்சமும் பரவியது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது.கடந்த ஒரு வாரமாக நீடித்த அமெரிக்கா இஸ்ரேல் மோதல் இப்போது அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது. ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஓவர்நைட்டில் மூன்று முக்கியமான அணு ஆயுத தளங்களை அமெரிக்கா தாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் நேரடியாக அமெரிக்கா வந்துள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.அதேநேரம் அமெரிக்காவின் இந்த தாக்குதலால் அணு கசிவும் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது ஈரான் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானின் அணுசக்தி அமைப்பு சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.அதில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினாலும் கூட இதனால் அணு உலைகளில் கதிரியக்க பாதிப்பு எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. அமெரிக்கா குறிவைத்துத் தாக்குதல் நடத்திய இடங்களில் கதிர்வீச்சு கசிவுகள் ஏதும் இல்லை என்றும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்கா தாக்குதல் நடத்தியபோதும் இதனால் நாட்டின் அணுசக்தி திட்டம் எதுவும் பாதிக்கப்படாது என்றும் ஈரான் கூறியுள்ளது.இந்தத் தாக்குதல்கள் சர்வதேச சட்டத்தை மீறும் வகையில் இருப்பதாகவும் ஈரானின் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஈரான் அரசு, அமைதியான அணுசக்தி மேம்பாட்டுக்கான ஈரானின் உரிமையை ஆதரிக்க வேண்டும் என்று சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பாக ஈரானின் அணுசக்தி பாதுகாப்புத் துறையின் தலைவர் முகமது ரேசா கார்டன் கூறுகையில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மிகப் பெரிய கிரிமினல் தாக்குதல் நடத்தியுள்ளது. அதேநேரம் அணு உலைகளில் எந்தவித கதிர்வீச்சு கசிவும் ஏற்படவில்லை.அமெரிக்கா இன்று காலை நடத்திய கிரிமினல் தாக்குதல் மிக மோசமானது. எங்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாங்கள் ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இந்த கொடிய தாக்குதலுக்குப் பிறகும், எங்கள் அணு உலைகளில் இருந்து எந்தவொரு கதிர்வீச்சு பாதிப்பும் ஏற்படவில்லை. மக்கள் எந்த கவலையும் இன்றி அந்த இடங்களைச் சுற்றி தங்கள் இயல்பான வாழ்க்கையைத் தொடரலாம்” என்று கார்டன் கூறினார்.இன்று அதிகாலை ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி தளங்களில் அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.. அமெரிக்க விமானப்படையின் பி-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் விமானம் பங்கர் பஸ்டர் என்ற குண்டுகளை ஈரான் மீது வீசியுள்ளது. இந்த பங்கர் பஸ்டர் குண்டுகளால் நிலத்திற்கு அடியில் இருக்கும் இலக்குகளையும் கூட துல்லியமாகத் தாக்க முடியும்.அமெரிக்கா மூன்று இடங்களில் தாக்குதல் நடத்தினாலும் கூட ஃபோர்டோ தான் அதன் முக்கிய இலக்காகக் கருதப்படுகிறது. ஏனென்றால், ஃபோர்டோ மையம் தான் ஈரானின் அணுசக்தி திட்டத்தின் தலைமையிடமாகக் கருதப்படுகிறது. அதை அழிக்கவே அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இது மிகவும் வெற்றிகரமான தாக்குதல் எனக் குறிப்பிட்ட டிரம்ப், ஃபோர்டோ போய்விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
ஈரானில் அணு கசிவு? அமெரிக்க ஏவுகணைகளால் பாதிப்பு? அச்சத்தில் அலறும் மக்கள்!
