மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடைபெற்றது. 63 நாயன்மார்கள் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனிப் பெருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகார நந்தி, வெள்ளி ரிஷப வாகனம் என தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 29-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில், விழாவின் 8-ம் நாளான நேற்று அறுபத்து மூவர் விழா பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக, மதியம் 3.30 மணி அளவில் திருஞானசம்பந்தர் எழுந்தருளி, எலும்பை பூம்பாவையாக்கிய அற்புத நிகழ்ச்சி நடைபெற்றது.இதைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட வெள்ளிச் சப்பரத்தில் கபாலீஸ்வரர் எழுந்தருள, அவரைத் தொடர்ந்து 63 நாயன்மார்களும் தனித்தனி சப்பரங்களில் வீதி உலா வந்தனர்.
சிறப்பு அலங்காரத்துடன் வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரர் – கற்பகாம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்தனர். விநாயகர் முன்னே செல்ல, கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர், முருகப் பெருமான், சண்டிகேஸ்வரர், முண்டகக்கண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி மற்றும் வீரபத்திரர் அணிவகுத்து வந்தனர். கடைசியாக, மயிலை காவல் தெய்வமான கோலவிழியம்மன் வீதி உலாவுடன் விழா நிறைவு பெற்றது. மாடவீதிகளில் அறுபத்து மூவர் வீதி உலா வரும் காட்சியைக் காண பிற்பகலில் இருந்தே சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.
மயிலாப்பூர் மட்டுமின்றி சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் ஆங்காங்கே பந்தல் அமைத்து பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், பானகம், குளிர்பானங்கள் வழங்கினர்.ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். கோயிலைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் நாளை (ஏப்.1) இரவு 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.









