சபரிமலையில் மாசி மாத பூஜைகள் தொடக்கம் – குவியும் ஐயப்ப பக்தர்கள்..!

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. நடை திறந்த முதல் நாளிலேயே நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்திருந்தனர்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு மாசி மாத பூஜைகள் தொடங்கியது. மாதத்தின் முதல் நாள் என்பதால் நேற்றும் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் திரண்டிருந்தனர். வரும் 17ம் தேதி வரை கோயிலில் தினமும் நெய்யபிஷேகம், களபாபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

17ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் மாசி மாத பூஜைகள் நிறைவடையும். 17ம் தேதி வரை தினமும் அதிகாலை 5 முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.