நீலக்கொடிக்கு ரெடியாகும் மெரினா கடற்க்கரை!

சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெறுவதற்கான இரண்டாம் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இதுவரை கோவளம் கடற்கரைக்கு மட்டுமே இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னை மெரினா கடற்கரைக்கு இந்த சான்றிதழை வாங்கும் பணியில் தமிழ்நாடு அரசு இறங்கியுள்ளது. இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நீலக்கொடி என்பது சுற்று சூழலுக்கு ஏற்ப தூய்மையான கடற்கரைகளுக்கு வழங்கப்படும் சான்றிதழாகும். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கோவளம் கடற்கரைக்கு மட்டுமே இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல சென்னை மெரினா, கடலூர், ராமநாதபுரம், தூத்துகுடியில் உள்ள கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது.சென்னை மெரினா கடற்கரையில் முதற்கட்டமாக கடற்கரைக்கு நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெறுவதற்கான திட்ட பணிகளை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மெரினாவில் சுமார் 4 கட்டங்களாக இந்த பணிகளை நிறைவு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் மெரினா நீச்சல் குளம் அருகே சுமார் 7.31 கோடி மதிப்பில் முதற்கட்ட பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.முதற்கட்ட பணிகள் நிறைவு பெற்ற நிலையில், இரண்டாம் கட்ட பணிகள் 2026 ஜனவரி மாதம் தொடங்கியது. மொத்தம் சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் இந்த இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இரண்டாம் கட்ட பணிகளில் தற்போது 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், பிப்ரவரி மாத இறுதிக்குள் இந்த இரண்டாம் கட்ட திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.